Published : 17 Dec 2017 11:38 AM
Last Updated : 17 Dec 2017 11:38 AM

சக்திவாய்ந்த அணு ஆயுத நாடாக உருவெடுப்போம்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா எச்சரிக்கை

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுத மற்றும் ராணுவ பலம் கொண்ட நாடாக உருவெடுப்போம் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு குண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் வடகொரியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “கொரிய தீபகற்ப பகுதியில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. இதனால் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பேசும்போது, “வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்த அனைத்து வாய்ப்புகளும் தயாராக உள்ளன. அதேநேரம் அந்த நாட்டுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம்” என்றார்.

இதையடுத்து, வடகொரியாவின் நிரந்தர பிரதிநிதி ஜா சாங்-நாம் பேசும்போது, “ஒரே நேரத்தில் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வடகொரியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுத மற்றும் ராணுவ பலம் கொண்ட நாடாக உருவெடுக்க தொடர்ந்து இதே பாதையில் பயணிப்போம்.

அதேநேரம் எந்த ஒரு நாட்டுக்கோ பிராந்தியத்துக்கோ வடகொரியா அச்சுறுத்தலாக இருக்காது. மேலும் அணு ஆயுதங்கள், தொழில்நுட்பம், ஆயுதங்களுக்கான அணு மூலப்பொருட்களை சட்டவிரோதமாக பிற நாடுகளுடன் பரிமாறிக்கொள்ள மாட்டோம்” என்றார்.

ஆனால் ஏவுகணை தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஏனெனில், வடகொரியா பாகிஸ்தானிடமிருந்து சட்டவிரோதமாக அணு தொழில்நுட்பத்தை பெற்றுக் கொண்டு ஏவுகணை தொழில்நுட்பத்தை அந்த நாட்டுக்கு வழங்கி வருவதாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x