Published : 14 Dec 2017 01:13 PM
Last Updated : 14 Dec 2017 01:13 PM
பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.
1948 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபுப் போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கூடி ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் தரப்பில், "பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க வேண்டும். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்த முடிவு செல்லாது அமெரிக்காவின் முடிவு பூஜ்ஜியத்தை போன்றது” என்று கூறியுள்ளனர்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இனி ஈடுபடக் கூடாது என்று இஸ்லமிய ஒத்துழைப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
ஜெருசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராக அங்கீகரிக்கும்வரை மத்திய கிழக்கில் அமைதி திரும்பாது என்று அந்நாட்டு அதிபர் அப்பாஸி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT