Published : 09 Dec 2017 02:42 PM
Last Updated : 09 Dec 2017 02:42 PM
ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ.நா. பாதுகாப்பு சபை நிராகரித்துள்ளது.
கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக புதன்கிழமை அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு ஆலோசனை மேற்கொண்டது.
இந்த கூட்டத்தின் முடிவில் ஜெருசலேம் தொடர்பான பிரச்சனை பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை ஜெருசலேம் இரு நாட்டுக்கும் பொதுவான தலைநகரமாகதான் உள்ளது. ஐந்து ஐரோப்பிய நாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ. நா. சபை நிராகரித்துள்ளது.
ஐ. நா. பாதுகாப்பு சபையின் இந்த முடிவு குறித்து ஐ. நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இது இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கு என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT