Published : 23 Nov 2017 10:02 AM
Last Updated : 23 Nov 2017 10:02 AM

வடகொரியா கப்பல்கள் மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்க அரசு நடவடிக்கை

வடகொரியா கப்பல்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு நேற்று புதிய பொருளாதார தடை விதித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையே பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் சீனாவுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியா விவகாரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஆலோசனை நடத்தினார். ஆனாலும், வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க சீனா மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

மேலும் ஐ.நா. தடையையும் மீறி சீனாவைச் சேர்ந்த சில வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வடகொரியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருவதை அமெரிக்க அதிகாரி கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் (தடை செய்யப்பட்ட) பட்டியலில் வடகொரியாவை மீண்டும் சேர்த்துள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு ட்ரம்ப் அறிவித்தார்.

அத்துடன் வடகொரியா மீதான புதிய பொருளாதார தடை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் நுச்சின் கூறும்போது, “வடகொரியாவுடன் வர்த்தகம் செய்துவரும் அந்நாட்டு கப்பல்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மீது புதிதாக பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. இது வடகொரியாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும்” என்றார்.

ஒட்டுமொத்தமாக ஒரு தனி நபர், 13 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் 20 கப்பல்கள் மீது புதிதாக பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x