Last Updated : 08 Nov, 2017 04:46 PM

 

Published : 08 Nov 2017 04:46 PM
Last Updated : 08 Nov 2017 04:46 PM

ஏமனில் எல்லையை மூடுவது பேரழிவுக்கு வழிவகுக்கும்: ஐ.நா.சபை எச்சரிக்கை

உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும்போது அதன் எல்லைகளை மூடுவது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

தென் மேற்கு ஆசிய  நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சவுதியின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்த ஈரான் உதவி புரிந்துள்ளது என்று சவுதி குற்றம் சாட்டியது.

ஏமன் எல்லை மூடல்

ஈரானிடமிருந்து ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கும் ஆயுதங்களை தடுக்க எண்ணி சவுதி - ஏமன் அரசு கூட்டுப் படைகள் திங்கட்கிழமை ஏமன் எல்லையை மூட உத்தரவிட்டன.

இதனைத் தொடர்ந்து எல்லைப் புறத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், "ஏமனில் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். உள் நாட்டுப் போர் நடைபெற்று கொண்டிருக்கும் ஏமனில் எல்லைகளை மூடுவது பேரழிவை ஏற்படுத்தும். உணவு, மருந்து இல்லாமல் மக்கள் துன்பப்பட நேரிடும்''  என்று எச்சரித்துள்ளது.

எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் உணவுகள் மருந்துகளை மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x