Published : 22 Oct 2017 12:09 PM
Last Updated : 22 Oct 2017 12:09 PM
இராக் ராணுவம், குர்து படைகள் இடையே நேற்று கடும் சண்டை நடைபெற்றது. இதனால் அந்த நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதி இராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. இந்நிலையில் தனிநாடு கோரி குர்து இன மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 25-ம் தேதி நடந்த பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை குர்து இன மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து குர்து பகுதிகளில் இராக் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. குர்து இன மக்களுக்கு தனியாக படைப்பிரிவு உள்ளது. அந்த படையின் வீரர்கள் குர்து நகரங்களை பாதுகாத்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் குர்துகளின் அல்டன் குப்ரி நகரை நோக்கி இராக் ராணுவம் நேற்று முன்னேறியது. அவர்களை குர்து படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் கடும் சண்டை நடைபெற்றது. இதில் இராக் ராணுவத்தின் 10 கவச வாகனங்களும் ஒரு டாங்கியும் அழிக்கப்பட்டதாக குர்து படை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
இராக்கின் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியதால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்த நகரங்களை இராக் ராணுவம் அண்மையில் முழுமையாக மீட்டது. தற்போது குர்துகள் தனி நாடு கோரி ராணுவரீதியாக போராடுவதால் அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT