Published : 18 Oct 2017 11:06 AM
Last Updated : 18 Oct 2017 11:06 AM

உலக மசாலா: சகலகலா பாட்டி!

இங்கிலாந்தைச் சேர்ந்த 85 வயது ட்ரிஷ் வாக்ஸ்டாஃப், பாராசூட்டில் பறந்து சாகசம் செய்திருக்கிறார்! கடந்த 10 ஆண்டுகளாக மலையேற்றம், பாரா க்ளைடிங், சிறிய வானூர்திகளில் பறத்தல் என்று பல சாகசங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். “70 வயதுக்காரர்களே வயதாகிவிட்டது, என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார்கள். வயதானாலும் செய்ய முடியும் என்பதைக் காட்டவே நான் சாகசங்களில் ஈடுபட்டு வருகிறேன். பயமில்லையா என்று கேட்காதவர்களே இல்லை. நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி. போர்க்களத்தில் கூட வாழ்ந்திருக்கிறேன். துப்பாக்கி எதிரில் நிற்பதைவிட ஆபத்து ஏதாவது இருக்க முடியுமா? என்னைக் கேட்டால் சாலையைக் கடப்பதுதான் பெரிய ஆபத்து என்பேன். மற்ற எதைக் கண்டும் பயமில்லை. என் கணவர் மறைந்த பிறகுதான் சாகசங்களில் இறங்கினேன். என் குடும்பம் உற்சாகப்படுத்துகிறது. இதுவரை சாகசங்களின் மூலம் சம்பாதித்த 1 கோடியே 29 லட்சத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கியிருக்கிறேன்” என்கிறார் ட்ரிஷ்.

சகலகலா பாட்டி!

இங்கிலாந்தைச் சேர்ந்த 62 வயது மால்கம் ஆப்பிள்கேட், கடந்த 5 ஆண்டுகளாகக் காட்டுக்குள் வசித்து வருகிறார். மனைவி தன்னை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்தியதால் இந்த முடிவை மேற்கொண்டதாகக் கூறியிருக்கிறார்! “நான் தோட்ட வேலைகளைச் செய்துவந்தேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். வேலையை அதிகம் நேசித்ததால் நான் திருமணத்தைப் பற்றி யோசிக்காமலே இருந்தேன். 13 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டேன். மனைவி அழகாக இருப்பார். ஆரம்பத்தில் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அவர் என்னைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தார். வேலையிலிருந்து தாமதமாக வீடு திரும்பினால் சண்டை போடுவார். நான் ஊர் சுற்றிவிட்டுத் தாமதமாக வீடு திரும்புவதில்லை, வேலை காரணமாகத்தான் தாமதமாக வருகிறேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்தன. ஒருநாள் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். சில நாட்கள் என் நண்பரின் வீட்டில் தங்கி, விவாகரத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். பிறகு என்னுடைய சைக்கிளில் ஒவ்வொரு ஊராகச் சென்றேன். லண்டனில் ஓரிடத்தில் சைக்கிளைப் பூட்டாமல் வைத்திருந்தேன். யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள். கால்நடையாகவே அலைந்தேன். கிங்ஸ்டனில் அடர்ந்த காட்டைக் கண்டவுடன் அங்கே தங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நகரத்தை விட காடு இனிமையாக இருந்தது. அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று தோட்ட வேலைகள் செய்வேன். கிடைக்கும் வருமானத்தில் நிம்மதியாக வாழ்ந்துவருகிறேன். நான் இங்கே இருப்பது என் மனைவிக்கோ, உறவினர்களுக்கோ தெரியாது. என் தங்கை சில ஆண்டுகள் தேடினாள். பிறகு நான் இறந்துவிட்டதாக நினைத்து அழுகிறாள் என்று கேள்விப்பட்டு, அவளுடன் பேசினேன். என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்ந்துவருகிறேன்” என்கிறார் மால்கம்.

இல்லறத்தைவிட காட்டு வாழ்க்கையே மேல் என்கிறார் மால்கம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x