Published : 12 Oct 2017 12:36 PM
Last Updated : 12 Oct 2017 12:36 PM
வடகொரியா மீது நிச்சயம் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் எம்மாதிரியான நடவடிக்கையை அமெரிக்கா வடகொரியா மீது எடுக்கப் போகிறது என்பது பற்றி ட்ரம்ப் தெரிவிக்கவில்லை
இதுகுறித்து ஓவல் அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் பேசும்போது, "நான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவுக்கு எது நன்மை தருமோ அதைத்தான் செய்வேன்.
வடகொரியா விவகாரத்தில் அந்த நாட்டின் மீது அமெரிக்கா நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
அதன்படி வடகொரியாவின் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜவுளி, இரும்பு தாது ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
எனினும் பொருளாதாரத் தடைகளை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் வடகொரியா ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT