Published : 22 Sep 2017 09:42 AM
Last Updated : 22 Sep 2017 09:42 AM
இ
ர்மா சூறாவளியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு, துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மாரத்தான் பகுதியைச் ஜுலியோ மெலெண்டஸும் ஒருவர். சூறாவளியால் வீடு உட்பட அனைத்தையும் இழந்துவிட்டார். தற்போது தன்னுடைய ட்ரக்கில்தான் வசித்து வருகிறார். ஆனாலும் பிறருக்கு உதவுவதில் மும்முரமாக இருக்கிறார். சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்ணீர், உணவுப் பொருட்கள், போர்வை என்று தனக்குக் கிடைப்பதைக் கொடுத்துவிடுகிறார். ஜுலியோவைக் கவனித்து வந்த லேன் லோஸோனோ, காற்றுப் படுக்கை ஒன்றை அளித்தார். உடனே ஜுலியோ, “இந்த உதவிக்கு மிக்க நன்றி. ஆனால் என்னைவிட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை அளித்துவிடுவேன். உதவி வேண்டி ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லும்போதே அழுதுவிட்டார். லோஸோனோவை இந்தச் சம்பவம் உலுக்கிவிட்டது. ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். “நாங்கள் இரண்டு நாட்கள் அந்தப் பகுதி யில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். அடிக்கடி ஜுலியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னிடம் எதுவுமே இல்லாதபோதும், தனக்குக் கிடைக்கும் பொருட்களைப் பிறருக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும். இந்த நல்ல உள்ளத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் எங்கள் சந்திப்பு வீடியோவுடன், இந்த ஹீரோவுக்கு ஒரு வேலையும் வீடும் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதுவரை 50 லட்சம் தடவை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருக்கு ஏராளமானவர்கள் உதவுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்” என்கிறார் வேன் லோஸோனோ.
ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
ஜ
ப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, 4 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தார். குடியிருக்க வீடு இல்லை. எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு விட முடிவு செய்தார். “நான் வேலையற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன். உணவும் தங்கும் இடமும் அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்” என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுக்கிறார்கள். 500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள். “என்னுடைய வாடிக்கையாளர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நடந்துகொள்வேன். உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டுகொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும் என்னை மோசமாக நடத்தியதில்லை. அவர்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். வீட்டிலுள்ளவர்களை நகைச்சுவையால் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதே என்னுடைய முக்கியமான வேலை. மற்ற நேரங்களில் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்வேன். அவர்களுடன் வெளியே செல்வேன். உணவருந்துவேன். இன்று என்னை வாடகைக்கு எடுப்பதற்குப் பலத்த போட்டி. ஒரு மாதத்துக்கு முன்பே பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்” என்கிறார் கோட்டானி.
விநோதமான வேலை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT