Published : 21 Sep 2017 10:38 AM
Last Updated : 21 Sep 2017 10:38 AM

உலக மசாலா: ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள்!

மெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர் பூனைகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றில் சிக்னஸ் என்ற பூனையின் வால் மிக நீளமாக இருக்கிறது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய வீட்டுப் பூனை இதுதான். வாலின் நீளம் 18.4 அங்குலம். “சிக்னஸுக்கு 2 வயதாகிவிட்டது. பிறந்ததிலிருந்தே இயல்பான பூனைகளைவிட இதன் வால் மிக நீளமாக இருந்தது. இந்தப் பூனையின் சகோதரனுக்கு வால் சாதாரணமாகத்தான் இருக்கிறது. காரணம் தெரியவில்லை. ஒருகட்டத்தில் பூனையின் வால் அளவுக்கு அதிகமாக வளர ஆரம்பித்தது. அதற்குப் பிறகே சிக்னஸின் வாலை, பாதுகாக்க ஆரம்பித்தோம். கதவு பின்னால் ஒளிந்துகொள்ளும்போது வால் கதவில் சிக்கிவிடும். உயரமான இடத்திலிருந்து குதிக்கும்போது வாலுக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிடும். இவனைக் கண்காணிப்பதே ஒரு பெரும் வேலையாக மாறிவிட்டது. சென்ற வருடம் ஜூன் மாதம் கின்னஸ் நிறுவனத்திலிருந்து வந்து சிக்னஸின் வாலை அளந்தனர். 17.58 அங்குல நீளம் இருந்தது. தற்போது 18.4 அங்குலமாக வளர்ந்துவிட்டது. மாதந்தோறும் வளர்ச்சி தெரிகிறது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய வீட்டுப் பூனை இதுதான் என்று கின்னஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கிவிட்டது. சிக்னஸின் சகோதரன் ஆர்க்ட்ரஸும் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்திவிட்டான். ‘உலகின் மிக உயரமான வீட்டுப் பூனை’ என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறான். இவனின் உயரம் 19.5 அங்குலம். ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள் நிகழ்ந்திருப்பது குறித்து எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்கிறார் லாரன்.

ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள்!

லிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவுடன் நிஸ்மாவும் ரோயாவும் சட்டென்று தோழிகளாக மாறினர். இருவரும் மொராக்கோவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். கனடாவில் பிறந்தவர்கள் போன்ற விவரங்கள் எல்லாம் பின்னர்தான் தெரியவந்தன. இருவரும் ஒரே அறையில் தங்கியவுடன் நட்பு இன்னும் ஆழமானது. “ஒருமுறை என் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று ரோயாவின் அம்மாவிடம் போனைக் கொடுத்து அப்பாவிடம் பேசச் சொன்னேன். ஒரு சில நிமிடங்கள்தான் இருவரும் பேசினார்கள். உடனே என் அப்பா ரோயாவின் அம்மா யார் என்று கண்டுபிடித்துவிட்டார். என் அம்மாவின் ஆருயிர் தோழி ரோயாவின் அம்மா. இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். திருமணத்துக்கு பிறகும் பக்கத்து பக்கத்து வீடுகளில் குடியிருந்தனர். நானும் ரோயாவும் பிறந்தோம். அப்போதே நல்ல தோழிகளாக இருந்தோம். அதற்கு சாட்சியாக ஒளிப்படங்கள் இருக்கின்றன. பிறகு ரோயா குடும்பம் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டது. காலப் போக்கில் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் குடும்பம் மீண்டும் தொடர்புக்கு வந்திருக்கிறது. எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்கள் அம்மாக்களும் தோழிகள். நாங்களும் தோழிகள் என்பது சுவாரசியமானது” என்கிறார் நிஸ்மா.

அடடா! அம்மாக்களும் தோழிகள்; மகள்களும் தோழிகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x