Published : 09 Sep 2017 09:43 AM
Last Updated : 09 Sep 2017 09:43 AM
மெக்ஸிகோவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 32 பேர் உயிரிழந்தனர்.
மெக்ஸிகோ நாட்டின் தென் பகுதியில் சியாபஸ் மாநிலம் உள்ளது. இதன் கடற்கரை நகரான டொனாலாவில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் சுமார் 70 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 8.1 ரிக்டர் அலகாக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இதில் மெக்ஸிகோ முழுவதிலும் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். அண்டை நாடான கவுதமாலாவிலும் ஒருவர் இறந்தார்.
தொலைதூரப் பகுதியான மெக்ஸிகோ சிட்டி, கவுதமாலா சிட்டியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மெக்ஸிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கியதை தொடர்ந்து மக்கள் அவற்றிலிருந்து வெளியேறி தெருக்களில் திரண்டனர். தெற்கு மெக்ஸிகோ மற்றும் மேற்கு கவுதமாலாவில் இந்த நிலநடுக்கம் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. கட்டிட இடுபாடுகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
மெக்ஸிகோவை தாக்கிய நிலநடுக்கங்களில் இந்த நூற்றாண்டின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்றும் சுமார் 5 கோடி மக்கள் இதை உணர்ந்ததாகவும் அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். நிலநடுக்கத்தை தொடர்ந்து மெக்ஸிகோ, கவுதமாலா, எல்சால்வடார், கோஸ்டாரிகா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய 7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT