Published : 12 Aug 2017 08:29 PM
Last Updated : 12 Aug 2017 08:29 PM
வடகொரியா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியுள்ளார்.
வடகொரியா மீது ஐ.நா. சபை பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதுதொடர்பான தீர்மானத்துக்கு சீனா ஆதரவு தெரிவித்தது. அதேநேரம் தென்கொரியாவில் அமெரிக்க படைகள் குவிக்கப்படுவதற்கு அந்த நாடு ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
வடகொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவை சார்ந்துள்ளது. எனவே ஐ.நா.வின் பொருளாதார தடைகளை சீனா முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.
வடகொரியா அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணை வீசி அழிப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்தது.
வடகொரியா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்தப் பின்னணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது “வடகொரியா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தென்கொரியாவில் அமெரிக்க படைகளை குறைக்க வேண்டும்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தினார்.
“வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா. தடைகளை சீனா கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வடகொரியாவின் அணுஆயுத திட்டங்களை சீனா தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அதிபர் ட்ரம்ப் சீன அதிபரை கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT