Last Updated : 11 Aug, 2017 01:00 PM

 

Published : 11 Aug 2017 01:00 PM
Last Updated : 11 Aug 2017 01:00 PM

வடகொரியாவுக்கு எதிராக போர் பயிற்சியில் அமெரிக்கா, தென் கொரியா?

 

அமெரிக்காவின் குவாம் தீவை தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்காவும், தென்கொரியாவும் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவுக்கு எதிரான இப்போர் பயிற்சிகள் ஆகஸ்ட் 21 - 31 வரை நடைபெறவுள்ளதாகவும் இதில் 10,000க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினருடன் தென் கொரிய படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட தயராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்பயிற்சிகள் வடகொரியாவின் தாக்குதலை சமாளிப்பதற்கான இயற்கையான தற்காப்பு முறை மட்டுமே என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கடந்த சில மாதங்களாக நடத்தி வரும் ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை எரிச்சலைடைய செய்தது. குறிப்பாக அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் வடகொரியா வெற்றிகரமாக நடத்தியது.

இதனையடுத்து வடகொரியாவை கட்டுப்படுத்த எண்ணிய அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. வடகொரியா மீதான இந்தத் தடைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஒப்புதல் வழங்கினார்.

இந்த நிலையில் இந்தத் தடைக்கு கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் ஒப்புதல் வழங்கின.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை கடுமையாக விமர்சித்த வடகொரியா, ஏவுகணை சோதனைகளை கைவிட மாட்டோம் என்று கூறியதுடன் அமெரிக்காவின் ராணுவ தளவாட பகுதியான குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியது.

இதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆணைக்காக காத்திருப்பதாக வடகொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹ்வாசோங் -12 என்ற ஏவுகணையின் மூலம் அமெரிக்காவின் குவாம் பகுதியை வடகொரியா தாக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை குவாம் பகுதியில் வடகொரியா தாக்குதல் நடத்தினால் இதுவரை அந்நாடு எதிர்கொள்ளாத விளைவை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x