Published : 03 Sep 2014 10:15 AM
Last Updated : 03 Sep 2014 10:15 AM

மேலும் ஓர் அமெரிக்க பத்திரிகையாளரின் தலை துண்டிப்பு: மீண்டும் ஐ.எஸ். வெறிச் செயல்

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த இன்னொரு பத்திரிகையாளர் ஸ்டீவன் சாட்லாஃப் என்பவரின் தலையை துண்டித்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படை.

31 வயதான ஸ்டீவன் சாட்லாஃப் கடந்த 2012-ம் ஆண்டு சிரியாவின் ஆலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டார்.

இந்நிலையில், ஸ்டீவன் சாட்லாஃப் தலை துண்டிப்பு வீடியோ பதிவுகளை ஐ.எஸ். வெளியிட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்த புலனாய்வு அதிகாரிகள், வீடியோ நம்பகமானதே என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கேத்தலீன் ஹேடன் கூறுகையில்: "அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விரிவான ஆய்வின் அடிப்படையில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் ஸ்டீவன் சாட்லாஃப் தலையை துண்டிக்கும் வீடியோ நம்பகமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

'அமெரிக்காவுக்கு 2-வது தகவல்'

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப்படை அனுப்பியுள்ள அந்த வீடியோவுக்கு (அமெரிக்காவுக்கு இரண்டாவது தகவல்) “A second message to America” என பெயரிடப்பட்டுள்ளது.

இராக் பிரச்சினையில் அமெரிக்க தலையீட்டை கண்டிக்கும் வகையில் ஸ்டீவன் சாட்லாஃப் தலை துண்டிக்கப்படுவதாக கூறுப்பட்டுள்ளது. 'இவரது தலை, இராக் பிரச்சினையில் அமெரிக்க தலையீட்டிற்கான விலை' என்கிறது கிளர்ச்சியாளரின் அந்தப் பேச்சு.

தங்கள் பிடியில் இருக்கும் டேவிட் ஹெய்ன்ஸ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த பிணைக் கைதியை கொலை செய்யப்போவதாக கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

அமெரிக்கா வருத்தம்:

வெள்ளை மாளிகையில் அன்றாட செய்திகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அந்த செய்தி வெளியானது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி செயலர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது: "ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலை அமெரிக்க நிர்வாகம் கடந்த சில நாட்களாகவே கூர்ந்து கவனித்து வருகிறது. ஸ்டீவன் சாட்லாஃப் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது சில வாரங்களுக்கு முன்னரே உறுதியானது. இந்தச் சூழலில் அவரது குடும்பத்திற்கும் அவருடன் பணியாற்றியவர்களுக்கும் அரசு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் பெர்னாடெட் மீஹன் கூறுகையில்: "அமெரிக்கர் ஸ்டீவன் சாட்லாஃப் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதை, அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

அந்த வீடியோ உண்மையானதாக இருந்தால், அமெரிக்கா அதற்காக மிகுவும் வருந்துகிறது. அப்பாவி அமெரிக்க பத்திரிகையாளரின் படுகொலைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்டீவனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

சோகத்தில் மூழ்கிய ஸ்டீவனின் குடும்பம்:

ஸ்டீவன் சாட்லாஃப் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு சிரியாவின் ஆலெப்போ நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த அவர் கடத்தப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஸ்டீவனை கொன்றுவிடுவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் விடுத்த மிரட்டல் ஸ்டீவன் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், தற்போது அவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து ஸ்டீவன் குடும்பத்தினரின் செய்தித் தொடர்பாளர் பராக் பர்பி கூறுகையில்: "ஈடு செய்ய முடியாத ஸ்டீவன் இழப்பை அவரது குடும்பத்தினர் தனிமையில் வருந்திவருகின்றனர். வேறு எந்த தகவலையும், கருத்தையும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை" என்றார்.

கடந்த மாத இறுதியில், ஸ்டீவனின் தாயார் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையினருக்கு வீடியோ மூலம் உருக்கமான ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். அதில், தனது மகன் ஒரு அப்பாவி பத்திரிகையாளர் எனவே அவரை கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அதே பாலைவனம்; அதே ஆரஞ்சு உடை:

கடந்த மாதம் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே கொல்லப்பட்ட வீடியோ பதிவு வெளியான போது அவர் ஒரு பாலைவனத்தில் இருந்ததும், ஆரஞ்சு நிற அங்கி அணிந்திருந்ததும் தெளிவாக தெரிந்தது. தற்போது, வெளியாகியுள்ள ஸ்டீவனின் வீடியோவும் அதே பாலைவன பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டீவனும் ஆரஞ்சு நிற உடையே அணிந்திருந்தார். இதனால், போலேவும், சாட்லாஃபும் ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அமெரிக்காவுக்கு ஒரு சின்ன இடைவெளிவிட்டு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்பதற்காக வீடியோவை காலதாமதமாக வெளியிட்டிருக்கலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்சைட்டில் வெளியான வீடியோ:

கடந்த முறை ஜேம்ஸ் போலே கொல்லப்பட்ட வீடியோ பதிவு சமூக ஊடகங்கள் வாயிலாக அம்பலமானது. ஆனால், இந்த முறை, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தங்களது இணையதளத்தில் மட்டுமே இந்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். தீவிரவாதிகளின் ஆன்லைன் நடைமுறைகளை கண்காணிக்கும் சைட் இன்டெல் குரூப் (SITE Intel Group) தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோ குறித்த முதல் தகவலை தெரியப்படுத்தியது.

பான் கி மூன் கண்டனம்:

ஸ்டீவன் சாட்லாஃப் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வெறிச் செயல் ஏற்புடையதல்ல; மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து இத்தகைய வெறிச் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x