Published : 10 May 2017 09:14 AM
Last Updated : 10 May 2017 09:14 AM

பிரிவினையால் உலகப் போர் வெடிக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

நாடுகளிடையே ஏற்பட்ட பிரிவினையால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. இதைத் தவிர்க்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் 72-வது ஆண்டு வெற்றி தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது:

உலகின் தலையெழுத்தை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று ஜெர்மனியின் நாஜிக்கள் நினைத்ததால் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. அப்போது பல்வேறு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரிவினையும் உலகப் போருக்கு வித்திட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற போர்களைத் தவிர்க்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்றே ரஷ்யா விரும்புகிறது. அதேநேரம் ரஷ்யாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதை ராணுவ ரீதியில் எதிர்கொள்வோம்.

இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப் பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. அதற்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும்.

இவ்வாறு புதின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x