Last Updated : 01 Mar, 2016 04:25 PM

 

Published : 01 Mar 2016 04:25 PM
Last Updated : 01 Mar 2016 04:25 PM

பாஸ்வேர்ட் விவகாரம்: ஆப்பிள் நிறுவனத்துக்கு நீதிமன்றம் சாதகம்

ஐ போனை திறப்பதற்கான பாஸ்வேர்டை அமெரிக்க காவல் துறைக்கு அளிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி, பரூக் என்பவரும் அவரது மனைவியும் 14 பேரைச் சுட்டுக் கொன்றனர். அவர்கள் ஐஎஸ் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னர் காவல் துறையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, அவர்களிடமிருந்து ஐ போன் கைப்பற்றப்பட்டது. ஆனால், அது கடவுச் சொல்லால் (பாஸ்வேர்டு) பாதுகாக்கப்பட்டிருந்தது. ஐ போனைப் பொறுத்தவரை, கடவுச்சொற்களை குறிப்பிட்ட முறைக்கு மேல் தவறாக பதிவு செய்தால், அந்த போனில் உள்ள தரவுகள் அழிந்துவிடும் வகையில் பாதுகாப்பு அம்சம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த கடவுச் சொல்லை அமெரிக்க எஃப்பிஐ அதிகாரிகளால் ஊடுருவ முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டது. ஆனால், வாடிக்கையாளரின் நம்பிக்கை முக்கியம், அவர்கள் கோரினால் மட்டுமே கடவுச் சொல்லைத் தரமுடியும் எனக் கூறி மறுத்துவிட்டது. அமெரிக்க அரசு பலமுறை நிர்பந்தம் செய்தும் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், அந்தரங்கமும் முக்கியம் எனக் கூறி உறுதியாக இருந்து விட்டது.

இதைத் தொடர்ந்து எஃப்பிஐ தரப்பில் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஐ போனை ஊடுருவுவதற்கு எஃப்பிஐக்கு உதவ சிறப்பு மென்பொருளை உருவாக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், புரூக்ளின் போதை மருந்து வழக்கொன்றில் ஆப்பிள் ஐ போனிலிருந்து விவரங்களைப் பெறுவது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் ஓரென்ஸ்டெய்ன், ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக 227 ஆண்டு பழமையான சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x