Published : 20 Dec 2013 11:42 AM
Last Updated : 20 Dec 2013 11:42 AM

தேவயானி விவகாரம்: மன்னிப்பு கோரவோ, வழக்கை வாபஸ் பெறவோ முடியாது - அமெரிக்கா

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை வாபஸ் பெறவும் மாட்டோம், மன்னிப்பு கோரவும் மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி விசா மோசடி வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டு, ஆடை களைந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதாவுக்கு மிகக் குறை வான சம்பளம் வழங்கினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப், வாஷிங்டனில் வியாழக்கிழமை கூறியதாவது:

தேவயானி கோப்ரகடே மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்த முழு விவரங்கள் எனக்குத் தெரியாது. எனினும் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மிகவும் தீவிரமாகக் கருது கிறது. எனவே இத்தகைய வழக்குகளை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இவை சட்ட அமலாக்கத் துறை சம்பந்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் தொலைபேசியில் பேசுவதற்காக நேரம் ஒதுக்கப்படவில்லை என்றார்.

தேவயானி கைது நடவடிக்கை தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை தொலை பேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் ஜான் கெர்ரி நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோருவார் என்று தகவல்கள் வெளியாகின.

அதை மறுக்கும் வகையில் பேட்டியளித்த மேரி ஹார்ப், இருவரும் தொலைபேசியில் பேச வாய்ப்பில்லை, இதுதொடர்பாக சில தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன என்று கூறினார்.

வழக்கில் இருந்து தப்ப முடியாது

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதிகள் குழு அலுவலகத்துக்கு தேவயானி மாற்றப்பட்டி ருப்பதால் ஐ.நா. தூதருக்குரிய உரிமைகள் அவருக்கு வழங்கப்படுமா என்று மேரி ஹார்ப்பிடம் கேட்டபோது, இதுதொடர்பாக இந்திய தரப்பில் இருந்து எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என்றார்.

தேவயானி எந்த தேதியில் ஐ.நா. தூதரகப் பணிக்கு மாற்றப்பட்டாரோ அந்த தேதியில் இருந்துதான் அதற்கான உரிமைகள் வழங்கப்படும் என்று மேரி ஹார்ப் தெரிவித்தார்.

ஐ.நா. தூதரகப் பணிக்கு மாற்றப்பட்டா லும் விசா மோசடி வழக்கில் இருந்து தேவயானி விடுவிக்கப்பட மாட்டார் என்பதையே மேரி ஹார்ப் இவ்வாறு மறை முகமாக உணர்த்தினார்.

அமெரிக்க தூதரகத்தில் சங்கீதாவின் மாமனார்

பணிப்பெண் சங்கீதாவின் மாமனார், புது டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுவது குறித்து மேரி ஹார்ப் கூறியதாவது:

அந்த தகவல் உண்மைதான், சங்கீதா வின் மாமனார் அமெரிக்க அரசு ஊழியர் கிடையாது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியின் தனிப்பட்ட ஊழியராக இருக்கிறார். அவர் என்ன பணி செய்கிறார் என்பது தெரியாது என்றார்.

கணவருக்கு விசா வழங்கியது ஏன்?

சங்கீதாவின் கணவர் மற்றும் அவரது 2 குழந்தைகளுக்கு விசா வழங்கப்பட்டு சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு திடீரென வரவழைக்கப்பட்டது குறித்து கேட்டபோது, பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைக்கவே விசா வழங்கப்பட்டது என்றார்.

இதுகுறித்து மேலும் பல்வேறு கேள்வி களை நிருபர்கள் எழுப்பியபோது மேரி ஹார்ப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x