Published : 23 Jul 2016 10:17 AM
Last Updated : 23 Jul 2016 10:17 AM
ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் புகுந்த தீவிரவாதி, அங்கிருந்த 9 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
இது ஐரோப்பிய நாடுகளில் கடந்த 8 நாட்களில் நிகழ்ந்த மூன்றாவது தாக்குதல் சம்பவம் ஆகும். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறை தலைவர் ஹுபெர்டஸ் ஆண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முனிச் நகரில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வெள்ளிக்கிழமை மாலை புகுந்த தீவிரவாதி, அங்கிருந்தவர்களை கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அந்தத் தெருவில் இருந்த வர்களை சுட்டுக்கொண்டே ஒலிம்பியா வணிக வளாகத்துக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சுட்டதில் அந்த தீவிரவாதி தப்பி ஓடி உள்ளார்.
இதனிடையே அங்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர், 10 பேரின் சடலங்களை மீட்டனர். இதில் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள் ளார். இவர்தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருப்பார் என்று கருது கிறோம்.
18 வயதான இந்த நபர் ஈரான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். காயமடைந்த 16 பேர் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தத் தாக்குதலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப் பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார். மேலும் இந்தத் தாக்குதலில் 3 பேர் ஈடுபட்டதாக போலீஸார் நம்பினர். ஆனால், ஒருவர் மட்டுமே தாக்குதலில் ஈடுபட்டதாக காவல் துறை தலைவர் பின்னர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பிரான்ஸின் நீஸ் நகரில், பஸ்டில் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கூட்டத்துக்குள் ஒருவர் லாரியை ஓட்டிச் சென்று 84 பேரை கொன்று குவித்தார். இதையடுத்து ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் கடந்த திங்கள்கிழமை ரயிலில் பயணம் செய்தவர்களை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.
இந்தியருக்கு பாதிப்பில்லை
இந்தத் தாக்குதலுக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில் லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT