Last Updated : 12 Feb, 2016 11:21 AM

 

Published : 12 Feb 2016 11:21 AM
Last Updated : 12 Feb 2016 11:21 AM

செம்மை காணுமா செர்பியா? - 8

1980-ல் ஸ்லோவேனியா வில் உள்ள மருத்துவ மனையில் டிட்டோ அனுமதிக்கப்பட்டார். அவர் கால்களில் ரத்த ஓட்டப் பிரச்னை. இதன் காரணமாக சில விரல்களில் ரத்த ஓட்டம் நின்றுபோய் கருப்பாகி விட்டன. அவரது இடது கால் நீக்கப்பட்டது. அதற்குச் சில மாதங்கள் பொறுத்து, மே 4, 1980 அன்று அவர் இறந்தார். மேலும் மூன்று நாட்கள் உயிரோடு இருந்தி ருந்தால் அது அவரது 88-வது பிறந்த தினமாக இருந்திருக்கும்.

யுகோஸ்லாவியாவில் அதிபருக் காக அதிகாரபூர்வமான ஒரு ரயில் உண்டு. அதில் டிட்டோவின் உடல் தலைநகர் பெல்கிரேடுக்கு எடுத்து வரப்பட்டது.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தேசிய கால்பந்துப் போட்டி ஒளிபரப் பாகிக் கொண்டிருந்தது. அன்றைய போட்டியின் 41-வது நிமிடத்தில் மூன்று பேர் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை நிறுத்துமாறு நடுவரிடம் சைகை செய்தனர். அனைவரும் திகைக்க அந்த அறிவிப்பை ஒருவர் செய்தார். ‘அன்புக்குரிய அதிபர் டிட்டோ இறந்து விட்டார்’’.

பலரும் அழுதனர். சில விளையாட்டு வீரர்கள் தரையில் பொத்தென விழுந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த 50,000 கால்பந்து ரசிகர்களும் விம்மியபடி கலைந்து சென்றனர்.

டிட்டோவின் இறுதி ஊர்வலம் அவர் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு நடைபெற்றது. உலக சரித்திரத்திலேயே மிக அதிக அளவில் பிற நாடுகளின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் என்கி றார்கள். ஐ.நா.வில் உறுப்பினர் களாக இருந்த 154 நாடுகளில், 128 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள். நான்கு மன்னர்கள், 31 அதிபர்கள், 22 பிரத மர்கள் ஆகியோரும் இதில் அடக்கம். மார்கரெட் தாட்சர், சதாம் உசேன், யாசர் அராபத், ப்ரெஷ்னேவ் போன்ற பெருந்தலை வர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் கலந்து கொண்டார். எனினும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரும், கியூபா வின் அப்போதைய அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் கலந்து கொள் ளாதது பலரால் விமர்சிக்கப்பட்டது.

இந்த அளவுக்கு அதிக எண்ணிக் கையில் அதற்குப் பிறகு வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டது 2005-ல் நடைபெற்ற போப் இரண்டாம் ஜான் பாலின் இறுதி ஊர்வலத்தில்தானாம்.

முதுமை அடைந்துவிட்டிருந்த டிட்டோ தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நீண்ட காலகட்டத்திலேயே அவருடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டன வாம்!

1980-ல் டிட்டோ இறந்த பிறகு யுகோஸ்லாவியா கூட்டமைப்பின் கட்டமைப்பு கொஞ்சம் ஆட்டம் கண்டது. அந்த நாட்டின் பொருளா தாரம் சரியத் தொடங்கியது. யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு குடியரசும்

தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்பட்டது. பின்னர் ஒவ்வொன்றும் பிரியக் குரல் கொடுத்தது. இதன் விளைவாக ரத்த ஆறுகள் ஓடத் தொடங்கின.

பல வருடங்கள் ஆட்சியில் இருந்த டிட்டோ தனது முதிய வயதில் இறந்திருந்தார். எனவே அவரோடு தொடக்கத்தில் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்ட யாருமே அவர் இறக்கும்போது அந்த நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க அளவு இல்லை. இளைஞர்களைப் பொறுத்தவரை ‘அத்தனை குடியரசு மக்களும் சகோதரர்களாக இருப்போம்’ என்பதைவிட தங்கள் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே நினைத்தனர். டிட்டோ மீது கொண்ட மரியாதை காரணமாக அமைதியாக இருந்தது போல் இருந்தது அவர்களின் நடவடிக்கை. டிட்டோ இரும்புக்கரம் கொண்டு புரட்சியாளர்களை அடக்கி விடுவார் என்ற பயமும் காரணமாக இருந்திருக்கலாம்.

டிட்டோ இறந்தவுடன் அவர் ஆட்சியைப் பற்றிய விமர்சனங் களும் மெல்ல மெல்ல கட்ட விழ்த்து விடப்பட்டன. புதிய தலைவர்கள் மெல்ல மெல்ல உருவாகி தங்களை வெளிகாட்டிக் கொண்டனர். யுகோஸ்லாவியாக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களை எதிரிகளாகவே கருதிக் கொண்டன செர்பியாவும், க்ரோவே ஷியாவும். ஆட்சி அதிகாரத்தில் செர்புகள் அதிக அளவில் இருப்ப தாக க்ரோவேஷியா குமுறியது. இரண்டாம் உலகப் போருக் குப் பிறகு மெல்ல மெல்ல செர்பியாவிலிருந்த முக்கிய தொழிற்சாலைகள் க்ரோவேஷி யாவுக்கும், ஸ்லோவேனியாவுக் கும் மாற்றப்பட்டதாக செர்பியா. ஆதங்கப்பட்டது.

ஏற்கனவே கூறியதுபோல தன் பிறப்பாலேயே கூட்டமைப்பின் பிரதிநிதியாக விளங்கினார் டிட்டோ. (க்ரோவேஷிய தந்தைக் கும் ஸ்லோவேனிய தாய்க்கும் பிறந்தவர்). டிட்டோ இறந்தவுடன், 35 வருடங்கள் அந்த நாட்டை கட்டிக் காத்து நாஜிக்களை உள்ளே அனுமதிக்காமல் பாது காத்த அவர் பாதையில் தொடர்ந்து செல்ல எந்தத் தலைவரும் உருவாகவில்லை.

தனக்கு ஒரு வாரிசை டிட்டோ ஏன் உருவாக்கவில்லை? தனது மறைவுக்குப் பிறகு யுகோஸ்லாவி யாவில் இப்படி ஆளப்பட வேண்டுமென்று ஒரு திட்டத்தை டிட்டோ வடிவமைத்திருந்தார். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு குடிதேசத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சுழற்சி முறையில் யுகோஸ்லாவியாவை ஆள வேண்டும் என்றார். அனைத்து குடியரசுகளுக்கும் சம வாய்ப்பு என்று கூறிக் கொண்டார். ‘தனக்குப் பிறகு எந்த பெரிய தலைவரும் யுகோஸ்லாவியாவில் உருவாகிவிடக் கூடாது என்ற டிட்டோவின் எண்ணத்தின் வெளிப் பாடுதான் இது’ என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x