Published : 07 Feb 2015 09:41 AM
Last Updated : 07 Feb 2015 09:41 AM
கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்திய வட்டாரங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அதிபர் ராஜபக்ச ஆட்சியின்போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல் படுத்த இலங்கை, சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
கடந்த ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா, அவரது அணியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை கடுமையாக விமர்சித்தனர். புதிய அரசு பதவியேற்றவுடன், இத்திட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிபர் சிறிசேனா தலைமையில் அண்மையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத் தில், கொழும்பு நகர துறைமுக திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்தத் தகவலை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான ரஜிதா சேனாரத்னா நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடலில் மணல் நிரப்பி நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர பணிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே துறைமுக நகர திட்டத்தை தொடர சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் காணப்படும் சில குறைபாடுகள் களையப்படும். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா அடுத்த மாதம் சீனா செல்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வந்தநிலை யில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இலங்கையின் நடவடிக்கை களில் மாற்றம் ஏற்படும் என்று இந்திய தரப்பில் எதிர்பார்க் கப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது இந்திய வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT