Published : 03 Jun 2015 10:30 AM
Last Updated : 03 Jun 2015 10:30 AM

உலக மசாலா: 64 ஆயிரம் ரூபாய்க்கு பாலாடைக் கட்டி

உலகிலேயே விலை மதிப்பு மிக்க பாலாடைக் கட்டி செர்பியாவில் தயாராகிறது. அரிய வகை பால்கன் கழுதைப் பாலில் தயாராகும் இந்தப் பாலாடைக் கட்டியின் விலை ஒரு கிலோ 64 ஆயிரம் ரூபாய். இயற்கையான மணமும் உப்பும் இந்தப் பாலாடைக் கட்டியின் சிறப்பான அம்சங்கள். செர்பியாவின் ஸாசாவிகா இயற்கையால் பாதுகாக்கப்பட்ட பகுதி.

இங்கேதான் பால்கன் கழுதைகள் வசிக்கின்றன. இவை அதிக அளவில் பாலைச் சுரப்பதில்லை. அதனால் ஒரு நாளைக்கு மூன்று வேளை கழுதைகளிடமிருந்து கைகளால் பாலைக் கறக்கின்றனர். ஒரு நாளைக்கு 15 கழுதைகளிடமிருந்து 3.7 லிட்டர் பால்தான் கிடைக்கிறது. 10 லிட்டர் பாலில் இருந்து 1 கிலோ பாலாடைக் கட்டி தயாரிக்கப்படுகிறது.

ஓராண்டுக்கு 90 கிலோ பாலாடைக் கட்டி மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஒருகாலத்தில் செர்பியாவில் பால்கன் கழுதைகள் அதிகம் இருந்தன. காலப் போக்கில் கழுதைகள் வளர்ப்பது குறைந்து போய்விட்டது. அதனால் பால்கன் கழுதைகள் அரிய வகை உயிரினமாக மாறிவிட்டன. 2012ம் ஆண்டு செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றிகளுக்கு எல்லாம் இந்தப் பாலாடைக் கட்டிதான் காரணம் என்று வதந்தி பரவியது. பிறகு அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது.

அதற்குப் பிறகு பாலாடைக் கட்டியின் விலை அதிகரித்து விட்டது. ’’கழுதைப் பால் மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியது. அதனால்தான் கழுதைப் பாலில் இருந்து பாலாடைக் கட்டியைத் தயாரிக்கும் எண்ணம் வந்தது’’ என்கிறார் கழுதைப் பண்ணையின் நிர்வாகி.

ம்ம்… கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்தார் என்பதால் அதற்கு அழகு தொடர்பான மதிப்பும் இருக்கிறது…

தென்னாப்பிரிக்காவில் உள்ள காடெங் பூங்கா சிங்கங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கே 85 சிங்கங்கள், நெருப்புக்கோழிகள், ஒட்டகச்சிவிங்கிகள் போன்றவை வசிக்கின்றன. லயன் சஃபாரி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. வாகனங்களில் அழைத்துச் செல்லும்போதே, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்லிவிடுவார்கள்.

இவை தவிர, ஆங்காங்கே பலகையிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. கார் கண்ணாடிகளை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துதான் உள்ளே அனுப்பி வைக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சிங்க உலாவுக்குச் சென்றார். அவருடன் சிம்சன் என்ற பூங்கா ஊழியரும் சென்றார். ஓரிடத்தில் கூட்டமாக அமர்ந்திருந்த சிங்கங்களைக் கண்டதும் அமெரிக்கப் பெண் காரின் ஜன்னல்களைத் திறந்தார். சிம்சன் எவ்வளவோ எச்சரித்தும் அவர் கேட்கவே இல்லை.

சட்டென்று ஒரு பெண் சிங்கம் கார் ஜன்னல் வழியே தாக்குதல் நடத்தியது. அமெரிக்கப் பெண் மோசமான காயங்களுடன் இறந்து போனார். சிம்சன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 4 மாதங்களில் சிங்கங்களின் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நபர் இவர்.

ஆபத்துகளைத் தானே வரவழைத்துக்கொள்கிறவர்களுக்கு என்ன சொல்ல முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x