Published : 11 Dec 2015 11:13 AM
Last Updated : 11 Dec 2015 11:13 AM

உலக மசாலா: விவசாயிகள் கவனத்துக்கு!

ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.

விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும்.

யானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும். பிறகு இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.

‘’யானை ஒருநாளைக்கு 400 கிலோ உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன.

நம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்…

பார்சிலோனாவில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் வசிக்கும் உராங்குட்டானை விலங்கியல் ஆர்வலர் படம் பிடித்தார். கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த உராங்குட்டான் அருகே சென்று ஒருவர் அமர்ந்தார். கையில் இருந்த பழம் ஒன்றை தம்ளருக்குள் போட்டார். பிறகு ஒரு குலுக்கு குலுக்கி, காலியான தம்ளரைக் காட்டினார். உராங்குட்டான் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் பழத்தை எடுத்துக் காட்டினார். உடனே கண்ணாடிக்கு அருகில் வந்து அமர்ந்தது உராங்குட்டான். தம்ளருக்குள் பழம் போடுவதை உற்று நோக்கியது. ஒரு குலுக்கலில் தம்ளரில் இருந்த பழம் மாயமானதைக் கண்டவுடன், வாய்விட்டுச் சிரித்தது. தரையில் புரண்டு, கைகளால் தரையை அடித்தபடி சிரித்துக்கொண்டே இருந்தது.

அடடா! நம்மைப் போலவே உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x