Published : 09 Dec 2015 10:17 AM
Last Updated : 09 Dec 2015 10:17 AM

உலக மசாலா: வாழ்நாளையே அர்ப்பணிக்கும் படம்!

முயற்சி செய்துகொண்டே இருந்தால் ஒரு நாள் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஸ்காட்லாந்து போட்டோகிராபர் ஆலன் மெக்ஃபேடின் மிகச் சிறந்த உதாரணம். மீன்கொத்தி பறவையின் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக 6 ஆண்டுகள் உழைத்திருக்கிறார். 7,20,000 தடவை படங்கள் எடுத்திருக்கிறார்.

’’என் தாத்தா ராபர்ட் முர்ரேதான் நான் போட்டோகிராபராக வருவதற்குக் காரணம். 6 வயதிலேயே ஸ்காட்லாந்தின் ஏரிக்கு அருகே அமர்ந்து, மீன்கொத்தி பறவைகளைக் கவனிக்க வைத்தார். எப்படிப் படங்கள் எடுக்க வேண்டும் என்ற நுட்பத்தையும் சொல்லிக் கொடுத்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு மீன்கொத்தியின் குறிப்பிட்ட காட்சியைப் படம் பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஏரிக்கு அருகில் தங்கிக்கொண்டேன். அடிக்கடி ஏரியில் தண்ணீர் அதிகரிப்பதால் மீன்கொத்திகளுக்கு ஆபத்து அதிகம். பாதுகாப்பான இடத்தில் ஒரு கூட்டை நானே உருவாக்கினேன். அங்கே மீன்கொத்திகள் குடும்பம் நடத்தி, முட்டைகள் இட்டு, குஞ்சு பொரித்தன. 6 ஆண்டுகள் ஒரே இடத்தில் மீன்கொத்திகளையே படங்கள் எடுத்துக்கொண்டிருந்தாலும் எனக்குச் சலிப்பு வரவில்லை.

என் லட்சியப் படத்துக்காக சிறிதும் ஆவல் குறையாமல் காத்திருந்தேன். ஒரு வருடத்தில் 100 நாட்கள் மீன்கொத்திகளுக்காக ஒதுக்கியிருந்தேன். இறுதியில் அந்தக் கனவு காட்சி அமைந்தே விட்டது. துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட் போல, மீன்கொத்தி தண்ணீரில் அலகைத் தொட்டுக்கொண்டு சில நொடிகள் நின்றதை மிகச் சரியாக கேமராவில் பதிய வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் அற்புதமான தருணம் அது. மிகப் பெரிய சாதனை நிகழ்த்திவிட்ட பெருமிதம்.

உலகிலேயே இதுபோன்ற காட்சிகள் எடுத்தவர்கள் மிகச் சிலரே. மீன்கொத்தியைப் படம் எடுப்பது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. பறவைகளின் வாழ்நாள் மிகக் குறைவானது. ஆனால் இந்த மீன்கொத்தியின் படம் இன்னும் நீண்ட காலம் இந்தப் பூமியில் நிலைத்திருக்கும். நான் எத்தனையோ படங்கள் எடுத்திருந்தாலும் இந்தப் படத்தை விட மிகச் சிறந்த படம் என்னிடம் இல்லை’’ என்கிறார் ஆலன்.

அடடா! இந்தக் காட்சிக்காக வாழ்நாளையே அர்ப்பணிக்கலாம்!

ஆஸ்திரியாவில் உள்ள டான்யூப் நதியில் திடீரென்று ஓர் இளைஞர் குதித்தார். தற்கொலை செய்துகொள்வதற்காகக் குதித்துவிட்டார் என்று கருதிய காவலர்கள், ஆற்றில் குதித்து இளைஞரைக் காப்பாற்றினார்கள். அவர் கைகளில் ஏகப்பட்ட பணம். பணத்தை எடுக்கவே இளைஞர் குதித்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. சுமார் 72 லட்சம் ரூபாய் பணம் யாருடையது, எங்கிருந்து வந்தது என்பது குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. செய்தித்தாள்களில் பணம் குறித்து தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. உரிமையாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, 5 முதல் 10 சதவீதப் பணம் அந்த இளைஞருக்குக் கிடைக்கும். ஓராண்டு வரை யாரும் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை என்றால், முழுப்பணமும் இளைஞருக்கே கிடைத்துவிடும் என்கிறார்கள்.

மர்மப் பணம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x