Published : 17 Sep 2016 10:10 AM
Last Updated : 17 Sep 2016 10:10 AM

உலக மசாலா: லிப்ஸ்டிக் ஓவியம்!

டொரோண்டோவைச் சேர்ந்த ஓவியர் அலெக்ஸ் ஃப்ராசெர், லிப்ஸ்டிக் மூலமே ஓவியங்களைத் தீட்டி வருகிறார்! கேன்வாஸ் துணி மீது லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளைப் பதித்து, முழு ஓவியத்தையும் உருவாக்குகிறார். ஒவ்வொரு முறையும் அலுக்காமல் லிப்ஸ்டிக் போட்டு, முத்திரை பதிக்கிறார். ‘எல்லோரும்தான் ஓவியம் தீட்டுகிறார்கள். வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காகவே லிப்ஸ்டிக் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதிக பொறுமை தேவைப்படும். சில மணி நேரங்களில் இருந்து ஒரு வாரம் வரை கூட ஆகலாம். உதடுகள் வலி எடுக்கும். ஆனாலும் எல்லோரும் பாராட்டும்போது வலி மறைந்து போகும். ஆரம்பத்தில் என் ஓவியங்கள் அதிகம் பேசப்படவில்லை. இன்று ஓவியங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்’ என்கிறார் அலெக்ஸ் ஃப்ராசெர்.

அது சரி, இந்த ஓவியம் எவ்வளவு காலம் நிலைக்கும்?

ஆஸ்திரியாவைச் சேர்ந்த 18 வயது அன்னா மெயர், தன் பெற்றோர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். கடந்த 7 வருடங்களாக அன்னாவின் அனுமதியின்றி, அவரது பெற்றோர் ஃபேஸ்புக்கில் படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். படங்களை நீக்கும்படி பல முறை மன்றாடிப் பார்த்த அன்னா, இறுதியில் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார். ‘என்னுடைய 11 வயதிலிருந்து அம்மாவும் அப்பாவும் ஃபேஸ்புக் பயன்படுத்தி வருகிறார்கள். என்ன போடுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. நான் வளர்ந்த பிறகு, எனக்கும் ஒரு கணக்கு ஆரம்பித்தபோதுதான், அதிர்ந்து போனேன். இதுவரை என்னுடைய 500 படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்கள்.

நான் சின்னக் குழந்தையாகக் கழிவறையில் அமர்ந்திருக்கும் படம், தவழும் வயதில் ஆடையின்றி படுத்திருக்கும் படங்களை எல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் பார்த்த என் நண்பர்கள் என்னை மிக மோசமாகக் கிண்டல் செய்தனர். அம்மா, அப்பாவிடம் என் நிலைமையைச் சொல்லி, படங்களை நீக்கும்படி கேட்டேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். வீட்டை விட்டு வெளியேறி, என் தோழியுடன் வசித்து வருகிறேன். பெற்றோர் மீது வழக்கு தொடுத்திருக்கிறேன்’ என்கிறார் அன்னா. ‘எங்கள் குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் நாங்கள் மிக முக்கியமாகக் கருதுகிறோம். அதைப் படங்களாக எடுத்து வைத்திருந்தோம். ஃபேஸ்புக் எங்கள் மகிழ்ச்சியை உலகத்துக்குக் காட்ட வழிகாட்டியது. வளர்ந்துவிட்ட அன்னாவின் படங்களை அவள் அனுமதியின்றி பயன்படுத்தினால்தான் தவறு. குழந்தையாக இருந்த படங்களைப் பயன்படுத்த எங்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது’ என்கிறார் அன்னாவின் அப்பா.

வழக்கு நவம்பர் மாதம் நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது. ஆஸ்திரியாவில் முதல் முறையாக இப்படி ஒரு வழக்கு வந்திருக்கிறது. ஒருவேளை பெற்றோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நஷ்ட ஈடாக அன்னாவுக்கு 2 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள், குழந்தைகளின் அனுமதியின்றி படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடாதீர்கள். இப்படி வெளியிடுவதால் குழந்தைகள் சைபர் க்ரைம்களுக்கும் ஆளாகலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் ப்ளீஸ்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x