Published : 05 May 2017 11:23 AM
Last Updated : 05 May 2017 11:23 AM
குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். இப்படிப் பிறக்கும் குழந்தைகளின் உள்உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைவதில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதனால் செயற்கையாகக் கருப்பை போன்ற ஒரு கருவியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி, அதில் குறைப் பிரசவத்தில் பிறந்த ஆட்டுக் குட்டிகளை வைத்து, பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர். கருப்பைக்குள் அம்னியோடிக் திரவத்தை நிரப்பி, தாயின் கருப்பையில் இருக்கும் வெப்பநிலையை உருவாக்கியிருந்தனர். குழாய் மூலம் உணவுகள் குட்டிகளுக்குச் செலுத்தப்பட்டன. குட்டிகளின் இதயத் துடிப்பும் சுவாசமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
மீதிக் காலத்தில் குட்டிகள் செயற்கைக் கருப்பையில் முழுமையாக வளர்ச்சியடைந்து, ஆரோக்கியமான குட்டிகளாக மாறிவிட்டன! பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் மருத்துவருமான ஆலன் ஃப்ளேக், “அறிவியலில் இது முக்கியமான முன்னேற்றம். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் நுரையீரல், இதயம் போன்றவை பாதிக்கப்படுகின்றன. இதனால் மூச்சுத் திணறல், நரம்புக் கோளாறுகள், வலிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் நாங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். மனிதக் குழந்தைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் நுரையீரல் வளர்ச்சி ஒத்துப் போனதால் ஆட்டுக் குட்டிகளைப் பரிசோதனைக்குத் தேர்ந்தெடுத்தோம்.
மூன்று ஆண்டு கால உழைப்பில் எங்கள் முயற்சி வெற்றியடைந்துவிட்டது. இதை மனிதக் குழந்தைகளுக்குப் பயன்படுத்துமாறு மாற்றுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்படும். ஏனென்றால் ஆடு 5 மாதங்களிலேயே முழு வளர்ச்சியடைந்துவிடும். மனிதனுக்கு 8 மாதங்கள் தேவைப்படும். உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஒன்றரை கோடி குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறக்கின்றன. எதிர்காலத்தில் குறை மாதக் குழந்தைகளின் உறுப்புகளை முழு வளர்ச்சியடைய வைத்து, ஆரோக்கியமான குழந்தைகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இந்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார்.
மருத்துவ அறிவியலில் மேலும் ஒரு மைல்கல்!
கொலம்பியாவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை விழுங்கிவிட்டார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவர் இரைப்பையிலும் சிறுகுடலிலும் இருந்த 57 நூறு டாலர் நோட்டுகளை வெளியே எடுத்திருக்கின்றனர். மீதிப் பணம் பெருங்குடல் வழியே வெளியே சென்றுவிட்டது. “நானும் கணவரும் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காக ஆண்டுக்கணக்கில் பணத்தைச் சேமித்து வைத்திருந்தேன். வீட்டில் இருந்த சில பொருட்களை விற்று அந்தப் பணத்தையும் பத்திரப்படுத்தியிருந்தேன். திடீரென்று கணவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அந்தக் கோபத்தில் சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் டாலர்களையும் (சுமார் நான்கரை லட்சம் ரூபாய்) எடுத்து விழுங்கிவிட்டேன். வயிற்று வலி வந்தவுடன் மருத்துவமனைக்குச் சென்று விஷயத்தைச் சொன்னேன். பெரும்பாலான பணத்தை எடுத்துவிட்டனர்” என்கிறார் அந்தப் பெண்.
பணம் விழுங்கி மகாதேவி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT