Published : 02 Mar 2017 10:22 AM
Last Updated : 02 Mar 2017 10:22 AM
இத்தாலியைச் சேர்ந்த பிரபல டிஜே ஃபேபியானோ அண்டோனியானி, கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்த ஸ்மார்ட்போனை எடுப்பதற்காகக் கீழே குனிந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார். அவரது வாழ்க்கை முடங்கியது. வேறு வழியின்றி, தன்னைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு அரசிடம் விண்ணப்பித்தார். இதற்கு தேவாலயம் கடுமையாக எதிர்த்தது. தனக்காக சட்டத்தை மாற்றியமைக்குமாறு கடந்த மாதம் பிரதமருக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்தார் அண்டோனியானி. பலன் இல்லை. மார்கோ காப்படோ என்ற செயற்பாட்டாளர், அண்டோனியானிக்கு உதவ முன்வந்தார். ஸ்விட்சர்லாந்திலுள்ள தற்கொலை கிளினிக்கில் எளிதாக மரணத்தைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அங்கே அண்டோனியானிக்கு மருத்துவம், உளவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உடல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால் தற்கொலைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குடும்பத்தினரும் காதலியும் மிகுந்த துயரத்துடன் விடைகொடுக்க, நிரந்தரமாக ஓய்வெடுத்துக்கொண்டார் அண்டோனியானி. “2015-ம் ஆண்டில் மட்டும் 225 இத்தாலியர்கள் இங்கே விண்ணப்பித்தார்கள். அதில் 117 பேர் ஸ்விட்சர்லாந்து வந்தனர். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு இத்தாலிக்குச் சென்றவர்கள் அதிகம். வெகுசிலரே வேறு வழியின்றி உறுதியாக மரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்கிறார் தற்கொலை கிளினிக்கின் செயலாளர் ஃப்லோமேனா காலோ.
துயரத்திலிருந்து விடுதலை…
சிலி நாட்டின் புர்டோ மன்ட் நகரில் உள்ள மரியா உர்ரா வீட்டில் அமானுட விஷயங்கள் இருப்பதாக காவல் துறையே உறுதி செய்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் வந்ததையடுத்து, போலீஸ் படை கிளம்பியது. வீட்டிலுள்ள ஜன்னல் கதவுகள் உடைந்திருந்தன. மெத்தை பாதி எரிந்த நிலையில் இருந்தது. பொருட்கள் கீழே விழுந்திருந்தன. வீட்டில் வசித்தவர்கள் வெளியே பயத்துடன் நின்று கொண்டிருந்தனர். காவல் துறை அதிகாரி முதலில் இதை நம்பவில்லை. அவர் வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் எங்கிருந்தோ பொருட்கள் பறந்து வந்தன. தைரியமாக ஒவ்வோர் அறைக்கும் சென்று சோதனையிட்டார். அங்கே யாரும் இல்லை. வீட்டிலிருந்து வெளியே வர முயன்றபோது, வாசல் கதவு சாத்திக்கொண்டது. ஜன்னல் வழியாக வெளியே வந்த கோன்ஜாலேஜ் என்ற அதிகாரி கூறும்போது, “ஏதோ அமானுடம் இங்கே இருக்கிறது. பேய் திரைப்படங்களில்தான் இதுபோன்ற காட்சிகளைக் கண்டிருக்கிறேன். குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்ததால் தப்பிவிட்டேன். நம்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார். மரியா உர்ரா கூறும்போது, “20 நாட்களுக்கு முன்பே எங்கள் வீட்டில் அமானுட விஷயங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன. சின்னச் சின்ன விஷயங்கள் என்பதால் அதை நம்பவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் மிக மோசமான விஷயங்களை நேரடியாக பார்த்தோம். கொடூரமான இரவு” என்றார். வீட்டின் உரிமையாளர்கள் அருகிலுள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது யாருடைய வேலையாக இருக்கும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT