Published : 26 Oct 2016 10:53 AM
Last Updated : 26 Oct 2016 10:53 AM
சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த சைக்கிள் நிறுவனம், Skunlock என்ற பிரத்யேக சைக்கிளை உருவாக்கியிருக்கிறது. இந்த சைக்கிளை திருடர்கள் யாராவது தொட்டால், ரசாயனம் வெளியேறி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாந்தி வரும்.
“அமெரிக்கா முழுவதும் ஆண்டுக்கு 15 லட்சம் சைக்கிள்கள் திருடு போகின்றன. திருடர்களிடமிருந்து சைக்கிள்களைப் பாதுகாப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தோம். 6 மாத உழைப்பில் தீர்வைக் கண்டுபிடித்து விட்டோம். பூட்டை உடைத்து, ரசாயன மணத்தையும் தாண்டி ஒருவர் சைக்கிளை எடுத்துச் சென்றால், கொஞ்சம் தூரம் கூடப் போகமுடியாது. சைக்கிளைப் போட்டுவிட்டு, ஓடி விடுவார்கள். எளிதாக சைக்கிளை மீட்டுவிடலாம். 2017ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது” என்கிறார் டேனியல் இட்ஜோவ்ஸ்கி.
திருடர்கள் ஜாக்கிரதை!
ரஷ்யாவைச் சேர்ந்த மார்கரிடா ஸ்விட்னென்கோவுக்கு 12 வயதில் குறைபாடுடைய மகன் இருக்கிறான். மார்கரிடாவுக்கும் அவரது கணவர் சர்கேவுக்கும் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்துகொண்டே இருந்தது. 2010ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட முடிவு செய்தனர். ஆனால் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது.
பலமுறை மார்கரிடாவையும் மகனையும் வீட்டை விட்டுத் துரத்த, சர்கே முயன்றார். ஆனால் உறுதியுடன் அதை முறியடித்தார் மார்கரிடா. மூன்று மாடிகள் கொண்ட மிகப் பெரிய பங்களாவில், மார்கரிடாவும் குழந்தையும் தங்கும் பகுதியில் கணப்பு அடுப்பு, சுடுநீர் இணைப்பு போன்றவற்றை நிறுத்தினார் சர்கே. நடுங்கும் குளிர்காலத்தில் தானும் தன் மகனும் எங்கே செல்வது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார் மார்கரிடா. ஒருவழியாக நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. வீட்டில் இருவருக்கும் பங்கு உண்டு என்றும் இருவரும் பாதியாகப் பிரித்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியது.
அன்று இரவு மார்கரிடா நிம்மதியாக மாடி அறையில் மகனுடன் தூங்கினார். காலை அறையை விட்டு வெளியே வந்தவர் அதிர்ந்து போனார். மாடிப்படி ஆரம்பிக்கும் இடத்தில் மிகப் பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அதாவது மாடியில் இருந்து வரும் வழி சுவர் மூலம் அடைக்கப்பட்டிருந்தது. இப்படிச் செய்வது முட்டாள்தனமானது, அநியாயமானது என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் மார்கரிடா, ஆனால் சர்கே காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. வீட்டைச் சரி பாதி பிரித்தாகிவிட்டது, அவரவர் இடங்களில் வாழ வேண்டியதுதான் என்று கூறிவிட்டார்.
உடனே காவல்துறையிடம் புகார் அளித்தார் மார்கரிடா. பசியால் அழுத மகனுக்கு, உணவு கொடுக்க வழியில்லை. மாடியில் இருந்து ஒரு கயிற்றைக் கட்டி கீழே விட்டார். சமையல்காரர் உணவுகளை ஒரு பையில் வைத்து மேலே அனுப்பினார். காவலர்கள் வந்தனர். சர்கேவின் செயலைக் கண்டு அதிர்ந்தனர். பிறகு அவரைச் சமாதானம் செய்து, சுவற்றை இடித்து, வழி உண்டாக்கினர். 3 மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு மார்கரிடா கீழே இறங்கி வந்தார். தான் புதிய மனைவியுடன் புதிய வாழ்க்கை வாழப் போவதாகவும் எக்காரணம் கொண்டும் தன் எல்லைக்குள் மார்கரிடா வரக்கூடாது என்றும் சொல்லிவிட்டார் சர்கே.
வீட்டின் குறுக்கே சுவர் கட்டிய விநோத கணவர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT