Published : 14 Sep 2016 10:00 AM
Last Updated : 14 Sep 2016 10:00 AM

உலக மசாலா: தானாகச் சுற்றும் மர்மத் தீவு!

அர்ஜெண்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது பரானா டெல்டா. இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறுதீவு. வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். ’ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார். அமானுஷ்யம், பேய், வேற்றுகிரக மனிதர்கள் போன்ற விஷயங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்காக, இடம் தேடி வரும்போது இதைக் கண்டுபிடித்துள்ளார்.

‘இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச் சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன என்பதைப் பலவிதங்களில் உறுதி செய்தோம். வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு நகர்ந்துவிடுகின்றன. திரைப்படத்துக்கு இடம் தேடி வந்த நான், இன்று ‘ஐ’ பகுதியை வைத்து, ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். விரைவில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பரானா டெல்டாவுக்கு வரப் போகிறேன். ‘ஐ’ பகுதிக்கான காரணத்தைக் கண்டறிவேன். இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது. மேற்பகுதி நிலம் சுழல்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஏராளமான கேள்விகளை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் விடை தேடுவதற்கு வல்லுநர்களின் உதவி தேவை. நீர், நிலம், மண், தாவரம் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு ஏராளமாகச் செலவாகும்’ என்கிறார் செர்கியோ நெஸ்பில்லர். சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாப்லோ சுவாரெஸ், துல்லிய வட்டமாக இருக்கும் ‘ஐ’ போன்ற ஒரு பகுதியை இதுவரை பார்த்ததில்லை என்கிறார்.

தானாகச் சுற்றும் மர்மத் தீவு!

அலெக்ஸ் பெய்லியும் க்ரூட் ஜுராக்கும் நாடக நடிகர்கள். இவர்கள் நடத்தும் நாடகங்கள் செல்லப் பிராணிகளுக்கானவை. அலெக்ஸும் க்ரூட்டும் செல்லப் பிராணிகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். விலங்குகளுக்கான உளவியலாளர்களின் உதவியுடன் நாடகங்களை நடத்தி வருகின்றனர். இந்த நாடகங்களில் விலங்குகளின் குரல், உடல் மொழியைப் பின்பற்றுகின்றனர். செல்லப் பிராணிகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். இதுவரை ஜுரிச், பெர்லின், வியன்னா போன்ற இடங்களில் 80 முறை நாடகம் நடத்தியிருக்கிறார்கள்.

பிரிஸ்டோல், இங்கிலாந்து போன்ற இடங்களில் இனி நடத்த இருக்கிறார்கள். ‘செல்லப் பிராணிகளுக்காக நாடகம் போடுவதன் மூலம் விலங்குகளின் மனம், குணம், நகைச்சுவை போன்றவற்றை நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது. பூனை முதலில் இடத்தை விட்டு அகன்றுவிடும். சிறிது நேரத்தில் திரும்பி வந்து, நாடகம் பார்க்கும். நாய்களுக்குப் பிடித்துவிட்டால், நாக்கால் நக்கும், முகர்ந்து பார்க்கும். ஒரு சில நாய்கள் நாடகம் முடிந்தவுடன் எழுந்து நின்று குரைத்து, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன’ என்கிறார் அலெக்ஸ் பெய்லி.

விலங்குகளுக்கு நாடகம் போடும் மனிதர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x