Published : 18 Aug 2015 10:26 AM
Last Updated : 18 Aug 2015 10:26 AM

உலக மசாலா: சிங்கத்தின் வாயில் கத்தி!

எகிப்தில் நடந்த தேசிய சர்க்கஸில் முகம்மது சையத் என்ற விலங்குகள் பயிற்சியாளர் உறைய வைக்கும் சாகசம் ஒன்றை நிகழ்த்தினார். முகம்மது சையத் வாயில் ஒரு கத்தி, அதை சிங்கத்தின் வாய்க்குள் வைக்கும்போது பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கறுப்பு ஆடையில், விளக்கு வெளிச்சத்தில், வியர்வை வழிய இந்த சாகசத்தைச் செய்து முடித்தார் முகம்மது சையத்.

இருவருக்கும் இடையே ஓர் அங்குல இடைவெளியே இருந்தது. புலி, முதலை, கரடி, குரங்குகளை வைத்து நிகழ்ச்சி நடத்தி வந்தவர்கள், தற்போது சிங்கங்களுடன் சாகசங்கள் செய்து வருகின்றனர். ஒரு கூண்டுக்குள் 10 சிங்கங்களுடன் இருவர் தங்கியிருந்த சாகசத்தையும் செய்து முடித்திருக்கின்றனர்.

சாகசத்துக்காக ஆபத்தை வரவழைத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி…

பாண்டாக்கள் பொதுவாக கறுப்பு, வெள்ளையிலேயே காணப்படுகின்றன. சீனாவின் க்வின்லிங் மலைகளில் மட்டும் சில பழுப்பு, வெள்ளைப் பாண்டாக்கள் அரிதாகக் காணப்படுகின்றன. 1985-ம் ஆண்டில் இருந்து இதுவரை 5 பாண்டாக்கள் மட்டுமே பழுப்பு வெள்ளையில் இருந்திருக்கின்றன. அவற்றில் க்யு லை என்று பெயரிடப்பட்டுள்ள பழுப்பு பாண்டா ஒன்றுக்கு தற்போது வயது 5. தாய் இல்லாமல் 2 மாதக் குழந்தையாகத் தனியே இருந்த குட்டியை வனப்பாதுகாப்பு மையத்தில் வளர்த்து வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச பாண்டாக்கள் பாதுகாப்பு அறக்கட்டளைக்காக கேத்தரின் ஃபெங், க்யு லை பாண்டாவை முதல் முறையாகப் படம் எடுத்திருக்கிறார். க்யு லை அம்மா கறுப்பு வெள்ளையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் க்யு லை மட்டும் எப்படி நிறம் மாறியிருக்கிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன. சூழ்நிலை, தண்ணீர், உணவு போன்ற காரணங்களால் பாண்டாவின் நிறம் மாறியிருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

கறுப்போ, பழுப்போ பாண்டா அழகுதான்!

பிரிட்டனைச் சேர்ந்தவர் 16 வயது ரிலே மிடில்மோர். 4 சகோதரர்களுடன் ஒரே பெண்ணாக வளர்ந்தார். அவர்களின் ஆடைகளை அணிந்துகொள்வார். தன்னையும் ஓர் ஆணாகவே நினைத்துக்கொண்டார். ஆனால் 12 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றம், அவரது நினைப்பை மாற்றிவிட்டது. தான் ஒரு பெண் என்பதை மிடில்மோரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வீட்டில் உள்ளவர்களிடம் தான் ஆணாக மாற விரும்புவதாகச் சொன்னார்.

முதலில் மறுத்தவர்கள், பிறகு மிடில்மோரின் சந்தோஷத்துக்காகச் சம்மதித்தனர். 18 வயதில் மிடில்மோர் ஆணாக மாறிவிடுவார். இந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்குப் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட இருக்கின்றன. தன்னுடைய கரு முட்டைகளை மட்டும் பத்திரப்படுத்திவிட்டார் மிடில்மோர். எதிர்காலத்தில் தன்னுடைய வாழ்க்கைத் துணை மூலம் தன் முட்டையில் இருந்து குழந்தை பெற்றுக்கொள்வதற்காக இப்படிச் செய்திருக்கிறார் மிடில்மோர்.

சிகிச்சைக்குப் பிறகாவது உங்களுக்கு சந்தோஷம் நிலைக்கட்டும் மிடில்மோர்…

வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதம் அரசியல் பேரணி ஒன்று நடந்தது. அப்போது மோதல் வெடித்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 8 மாதக் கர்ப்பத்தோடு அங்கே வந்த நஜ்மாவின் வயிற்றில் ஒரு குண்டு துளைத்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நஜ்மா. 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை சுரையா பிறந்தாள்.

ஆனால் வலது தோளும் வலது கண்ணும் குண்டு துளைத்ததால் சேதமடைந்திருந்தன. டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு சுரையா குணமடைந்துவிட்டாள். நஜ்மாவும் சுரையாவும் ஒரு மாதப் பிரிவுக்குப் பிறகு சேர்ந்திருக்கிறார்கள்.

உலகின் இரண்டு முகங்களையும் சந்தித்துவிட்டாள் சின்னஞ்சிறு சுரையா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x