Published : 12 Oct 2016 10:19 AM
Last Updated : 12 Oct 2016 10:19 AM

உலக மசாலா: கேப்சூல் தங்கும் விடுதிகள்!

கேப்சூல் தங்கும் விடுதிகள் ஜப்பானில் மிகவும் புகழ்பெற்றவை. வேலை வேலை என்று இருப்பவர்கள், நள்ளிரவில் வீடு திரும்ப இயலாது. அதனால் அருகிலிருக்கும் கேப்சூல் விடுதிகளில் தங்கிக்கொள்கிறார்கள். சவப்பெட்டி அளவுக்கு இந்த கேப்சூல் அறைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வோர் அறையிலும் ஒரு படுக்கை, தொலைக்காட்சிப் பெட்டி, இன்டர்நெட் இணைப்பு, கண்ணாடி, கடிகாரம், பை வைக்க சிறிய அலமாரி, குளிர்சாதன வசதி போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன.

ஒருவர் தாராளமாக உட்கார்ந்து வேலை செய்யலாம், படுக்கலாம். இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள கேப்சூல் அறைகளில் புகை பிடிக்கக்கூடாது, சாப்பிடக்கூடாது. குளியலறைகளும் கழிவறைகளும் தனியாக இருக்கின்றன. சில உணவுகளும் பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில் தங்குவதற்கே இவை பயன்படுகின்றன. ஆண்களே இந்த கேப்சூல் அறைகளில் அதிக அளவில் தங்குகிறார்கள். சில இடங்களில் பெண்களுக்குத் தனியாக கேப்சூல் அறைகளை ஒதுக்கியிருக்கிறார்கள்.

வேலையிலிருந்து வீடு திரும்ப முடியாதவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட முடியாதவர்கள், தங்கும் விடுதிகளில் செலவு செய்ய முடியாதவர்கள் கேப்சூல் விடுதிகளை நாடுகிறார்கள். வேலை தேடும் இளைஞர்கள், மாதக்கணக்கில் கேப்சூல் அறைகளில் தங்கிக் கொள்வதும் உண்டு. 50 முதல் 700 கேப்சூல் அறைகள் கொண்ட விடுதிகள் ஜப்பானில் இருக்கின்றன.

நல்ல விஷயம்தான், ஆனாலும் மார்ச்சுவரி அலமாரி நினைவுக்கு வருதே…

உலக விலங்குகள் தினமான அக்டோபர் 4 அன்று, இஸ்தான்புலில் டாம்பிலி பூனைக்கு ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. நடைபாதையை ஒட்டியுள்ள படியில், டாம்பிலி உட்கார்ந்திருப்பது போல, இந்தச் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். டாம்பிலி மிகவும் அழகான பூனை. தன்னுடைய குறும்புகளால் ஏராளமானவர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டது. டாம்பிலியின் விதவிதமான செய்கைகளைப் படங்கள் எடுத்து, இணையத்தில் பலரும் வெளி யிட்டனர். உலகம் முழுவதும் டாம்பிலியின் புகழ் பரவியது. கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்பிலி நோய்வாய்ப்பட்டது.

ஒரு மாதத்துக்குப் பிறகு இறந்து போனது. டாம்பிலி ஓடியாடி விளையாடிய தெருவில் நூற்றுக்கணக்கான மலர்க்கொத்துகளும் மெழுகுவர்த்திகளும் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டன. டாம்பிலி என்றும் நம் நினைவை விட்டு அகலக்கூடாது என்று முடிவு செய்த 17 ஆயிரம் ரசிகர்கள், நிரந்தரமாக ஒரு சிலை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இஸ்தான்புல் நகர நிர்வாகமும் உடனடியாகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. மனிதர்களைப் போல கையை ஊன்றியபடி உட்கார்ந்திருக்கும் புகழ்பெற்ற டாம்பிலியின் படத்தைச் சிலையாக வடித்து, டாம்பிலி வசித்த தெருவில் வைத்துவிட்டனர். ‘எங்கள் நாட்டில் டாம்பிலிக்கு இருந்த ஆதரவில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் உலகம் முழுவதும் தனக்கு ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருப்பதில்தான் டாம்பிலி தனித்துவம் பெறுகிறாள்’ என்கிறார் பூனையின் உரிமையாளர் ஜுலேலா சரிகா.

பூனைக்குச் சிலை வைத்த ரசிகர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x