Published : 09 Jun 2015 11:19 AM
Last Updated : 09 Jun 2015 11:19 AM

உலக மசாலா: கடல் கடக்கும் கன்னி!

அமெரிக்காவில் வசிக்கிறார் 30 வயது சோனியா பாம்ஸ்டெய்ன். நவீன படகில் தனியாக 6 ஆயிரம் மைல்களைக் கடலில் கடந்து சாதனை செய்வதற்காகக் கிளம்பியிருக்கிறார். தினமும் 14-16 மணி நேரம் துடுப்புப் போடுவார். பிறகு ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் துடுப்புப் போட ஆரம்பித்துவிடுவார். இதுவரை 16 பேர் இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இவர்களில் 2 ஆண்கள் மட்டுமே இதுவரை பசிபிக் கடலைக் கடந்து சாதனை செய்திருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சோனியா. செப்டம்பர் மாதம் அட்லாண்டிக்கைக் கடந்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மோசமான கார் விபத்தால் பாதிக்கப்பட்டார் சோனியா.

உடல்நிலை தேறியவுடன் 2012ம் ஆண்டு 3 ஆண்களுடன் சேர்ந்து கடல் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அந்தப் பயணத்தால் ஈர்க்கப்பட்டு, இன்று தனியாளாகச் சாதிக்கக் கிளம்பியிருக்கிறார்.

வெற்றியுடன் திரும்பி வாருங்கள் சோனியா!

பிரிட்டனில் இயங்கி வருகின்றன 500 கிளைகள் கொண்ட அஸ்டா சூப்பர் மார்க்கெட்கள். காய்கறிகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வைப்பதற்காகக் கடந்த 7 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தது அஸ்டா. மஞ்சள், சிவப்பு குடைமிளகாய்களை இணைத்து ஸ்பெஷல் குடைமிளகாயை உருவாக்கியிருக்கின்றனர். இந்தக் குடைமிளகாயில் மஞ்சளில் சிவப்புக் கோடுகள் கண்களைக் கவர்கின்றன.

இனிப்புச் சுவையுடன் ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட அதிக அளவுக்கு வைட்டமின் சி யும் இவற்றில் அடங்கியிருக்கின்றன. குழந்தைகளிடம் ஸ்பெஷல் குடை மிளகாயைச் சமைத்துக் கொடுத்துவிட்டு, கணக்கெடுப்பு எடுத்ததில் முதல் இடத்தைப் பெற்றுவிட்டது! தக்காளி, கேரட், பட்டானி, ஆரஞ்சு அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. பார்க்கவும் சுவைக்கவும் அட்டகாசமாக இருக்கும் இந்த ஸ்பெஷல் குடைமிளகாய் ஜூன் 8 முதல் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு வருகின்றன. 2 ஸ்பெஷல் குடைமிளகாயின் விலை ரூ.195/-

இனிப்பு, புளிப்பு எல்லாம் இருந்தால் குடைமிளகாய் என்ற பெயரை மாற்ற வேண்டும்…

நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயருக்குத் தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கே விதவிதமான கார்ட்டூன் கேரக்டர்கள் வேடமிட்டு மனிதர்கள் உலாவிக்கொண்டிருக்கின்றார்கள். கார்ட்டூன் கேரக்டர்களிடம் கை குலுக்குவதிலும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள் சுற்றுலாப் பயணிகள். அவர்களாக விரும்பி அன்பளிப்பைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.

ஹலோ கிட்டி, மின்னி மவுஸ் போன்று வேடமிட்டு வந்தார்கள் மெலெண்டஸும் மோச்சாவும். இருவரும் சுற்றுலாப் பயணிகளிடம் மிரட்டி பணம் பெற்றுக்கொள்வதும், அதிகப் பணம் தராதவர்களிடம் வன்முறைகளில் இறங்குவதுமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அங்கீகாரம் பெறாத சிலர் இப்படிச் சுற்றுலாப் பயணிகளிடம் மோசமாக நடந்துகொள்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.

கார்ட்டூன் கேரக்டர் வேடமிட்டுக்கொண்டு இப்படிச் செய்யலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x