Published : 01 Oct 2015 11:18 AM
Last Updated : 01 Oct 2015 11:18 AM

உலக மசாலா: கடலுக்குள் விவசாயம்!

இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கடலில் விவசாயம் செய்து சாதனை படைத்திருக்கிறது. நிலம் மாசு, பருவ மழை தவறுதல், வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் எதிர்காலத்தில் நிலத்தில் விவசாயம் செய்வது கடினமாக இருக்கப் போகிறது. அதற்கான தீர்வு ஒன்றைக் கண்டறியும் முயற்சியாக கடலுக்குள் பயிர் செய்திருக்கிறார்கள். இதை ‘நேமோ கார்டன்’ என்று அழைக்கிறார்கள். இந்தத் தோட்டத்தில் இருந்து ஸ்ட்ராபெர்ரி, துளசி, பீன்ஸ், பூண்டு, கீரைகளை விளைவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் செய்தி தொடர்பாளர் லுகா காம்பெரினி, ‘‘நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்று விவசாயத்தை முயற்சி செய்திருக்கிறோம்.

கடலில் 18 36 அடி ஆழத்தில் மிதக்கும் கோள வடிவக் கூண்டுகளை அமைத்திருக்கிறோம். அதற்குள் பாதியளவு தண்ணீர் இருக்கும். மேலே செடிகளை தொட்டிகளுக்குள் வைத்திருக்கிறோம். இரவிலும் பகலிலும் 79 டிகிரி வெப்பமும் 83 சதவிகிதம் ஈரப்பதமும் கூண்டுக்குள் இருக்கும். இங்கிருந்து வெளியேறும் அதிக அளவிலான கார்பன் டையாக்ஸைட் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது.

வெப் கேமராக்கள் மூலம் இவற்றைக் கவனித்து வருகிறோம். இந்த அழகான கடலில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இரண்டு ஆண்டுகளில் பல முறை தோல்விகளைச் சந்தித்தோம். இறுதியில் எங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது. கடல் விவசாயம் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது என்பது மிக முக்கியமானது’’ என்கிறார். ஆக்டோபஸ், கடல்குதிரை, நண்டு போன்ற உயிரினங்கள் இந்தக் கூண்டுக்கு அருகில் அடிக்கடி வந்து செல்கின்றன.

ஆனால் எந்த ஓர் உயிரினமும் செடிகளுக்குத் தீங்கு விளைவிக்கவில்லை. இதுவரை கடலுக்கு அடியில் விளைவிக்கப்பட்ட காய்களையும் பழங்களையும் விற்பனைக்கு வைக்கவில்லை. ஆய்வுகளுக்கும் விருந்தினர்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். எதிர்காலத்தில் உற்பத்தி அதிகமாகும்போது விற்பனைக்கு வரும்.

நிலத்தில் கட்டிடங்களைக் கட்டிவிட்டால், கடலுக்குள்தான் விவசாயம் பண்ணணும் போல…

சீனாவின் குவாங்ஸொவ் பகுதியைச் சேர்ந்த பணக்கார இளைஞர் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரது காதலி பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறார். இளைஞர் சீனாவின் விலை உயர்ந்த 11 கார்களை வாடகைக்கு எடுத்தார். காதலியின் விடுதிக்கு முன்பு, இதய வடிவில் நிறுத்தினார். காதலியை அழைத்தார். கார்களுக்கு நடுவே வைர மோதிரத்துடன் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டினார். அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தார். ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் திருமணம் என்று கூறிவிட்டார். இளைஞரும் ஒப்புக்கொண்டார். ’இவள் என் காதலி, யாரும் அருகில் வராதீர்கள்’ என்று ஒரு பேனரில் எழுதி, இருவரும் அதற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்னும் 4 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் என்றாலும் இன்றே இவர்களைப் பற்றிய பரபரப்பு மீடியாக்களில் தொற்றிக்கொண்டது.

இந்தப் புரிதலும் அன்பும் என்றும் தொடரட்டும்!

கரினா அலியானி கடல் சாகசக்காரர். ஒரு படப்பிடிப்புக்காக ஆழ்கடலுக்குச் சென்றார். குகை போன்ற இடத்தை அடைந்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அங்கே 8 மீட்டர் நீளம் கொண்ட மிகப் பெரிய அனகோண்டா சில நாட்களுக்கு முன் இரையைக் கொன்று விழுங்கிவிட்டு, அசையாமல் படுத்திருந்தது. இந்த அனகோண்டாவின் எடை சுமார் 400 கிலோ இருக்கும் என்கிறார். கரினாவையும் அனகோண்டாவையும் அலெக்சாண்டர் சோஸ்சி படம்பிடித்தார்.

‘‘20 நிமிடங்கள் அனகோண்டாவைக் கவனித்தோம். பெரிதாக அசைவு இல்லை. எங்களால் தலையை மட்டுமே நன்றாகப் பார்க்க முடிந்தது. வாலைப் பார்க்க முடியவில்லை. பாம்புகள் தண்ணீரில் வேகமாக நீந்தக்கூடியவை. அதனால் பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்தேன். ஆனால் அன்றைக்கு நாங்கள் அனகோண்டாவின் இரை அல்ல என்பது எங்களுக்குத் தெரிந்த பிறகே நிம்மதி வந்தது. ஆபத்தை நேருக்கு நேர் சந்தித்தாலும் கடலில் அனகோண்டா வசிப்பதை நான்தான் கண்டறிந்திருக்கிறேன்’’ என்கிறார் கரினா.

மனிதனுக்கு இன்னும் தெரியாத மர்மங்கள் எவ்வளவோ!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x