Published : 27 Jan 2017 10:28 AM
Last Updated : 27 Jan 2017 10:28 AM
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஐஸ்க்ரீமி ஆர்டிசன் ஜெலடோ, சுவையான ஐஸ் க்ரீம்களை வழங்கிவருகிறது. ஆனால் ஐஸ் க்ரீம்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் ஆசிய சுவைகளைத் தாண்டி, வெற்றி பெற இயலவில்லை. இவர்களின் ஐஸ் க்ரீம் சுவைகளை விட, அது மிக அழகாக வழங்கப்படுவதில்தான் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறது. ஜெலடோ கோன் ஐஸ் க்ரீம்கள், அழகான பூக்களின் வடிவத்தில் வழங்கப்படுகின்றன! கடுங்குளிர் காலத்தில் இரவு நேரங்களில் கூட இங்கே மக்கள் வரிசையில் இருந்து கோன் ஐஸ் க்ரீம்களை வாங்கிச் சுவைக்கின்றனர். ஆரம்பத்தில் எல்லா ஐஸ் க்ரீம் கடைகளைப் போலத்தான் ஐ க்ரீமி ஜெலடோவும் இருந்தது. மக்கள் அதிகம் வரவில்லை. வியாபாரத்தைப் பெருக்க, பூக்கள் வடிவத்தில் கோன் ஐஸ் க்ரீம்களை வழங்க முடிவுசெய்தனர். ஐஸ் க்ரீம் அலங்காரக் கலைஞர்களை வைத்து, வெவ்வேறு சுவைகளில் வெவ்வேறு வண்ணங்களில் பூக்கள் வடிவ கோன் ஐஸ் க்ரீம்களை விற்பனை செய்தனர். மக்கள் இவற்றின் அழகில் மயங்கிப் போனார்கள். விரைவில் பிரபலமானது. “இதுவரை வழங்கப்பட்ட அதே ஐஸ் க்ரீம்தான். சுவையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் அழகான, யாருமே செய்யாத வடிவத்தில் வழங்கிய சிறிய முயற்சி இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித் தந்துவிட்டது. சிலர் இரு வண்ணப் பூக்களைக் கேட்பார்கள். இன்னும் சிலர் பல வண்ணப் பூக்களைக் கேட்பார்கள். அவர்களின் விருப்பம் அறிந்து, எங்கள் கலைஞர்கள் ஐஸ் க்ரீம் பூக்களை உருவாக்கித் தருவார்கள். இதைச் செய்வதற்கு நேரம் அதிகமாகும். ஆனாலும் மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த வெற்றி ஆஸ்திரேலியாவின் பல இடங்களிலும் கிளைகளைப் பரப்ப உதவியிருக்கிறது. தினமும் 24 விதச் சுவைகளில் ஐஸ் க்ரீம்களை வழங்கிவருகிறோம். ஆசிய ஐஸ் க்ரீம்களின் சுவை எங்களை மிகவும் ஈர்த்திருக்கிறது. தாய் டீ, பனைவெல்லம், கருஞ்சீரகம், துரியன் போன்றவற்றை வைத்து இன்னும் புதிய சுவைகளில் ஐஸ் க்ரீம்களை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான சாசினுச் லாப்வாங்பைபூன்.
உலகின் மிக அழகான ஐஸ் க்ரீம் பூக்கள்!
அர்ஜெண்டினாவில் உள்ள ஒரு நதி, பாறைகளுக்கு இடையே ஆர்ப்பரித்து ஓடிவந்துகொண்டிருந்தது. வெள்ளை, கறுப்பு நிற நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்தன. திடீரென்று கறுப்பு நாய் ஆற்றுக்குள் விழுந்த வேகத்தில், மிதந்து வந்த ஒரு கட்டையை வாயில் கவ்விக்கொண்டது. பாறைகளில் ஏற முயற்சி செய்தபோது, தண்ணீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டது. பாறையில் தன் நண்பனைக் காப்பாற்ற காத்திருந்தது வெள்ளை நாய். தண்ணீரில் அடித்துக்கொண்டு வந்த கறுப்பு நாய் பிடித்திருந்த மரக்கட்டையைப் பெரு முயற்சி செய்து இழுத்தது. கறுப்பு நாய் பாறையில் ஏறி உயிர் பிழைத்தது. ஒரு சில நிமிடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. தவறி விழுந்தால் எப்படி உயிர் தப்பவேண்டும் என்றும் ஓர் உயிரை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த நாய்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
ஆற்றில் விழுந்த நண்பனைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT