Published : 11 Aug 2016 09:30 AM
Last Updated : 11 Aug 2016 09:30 AM

உலக மசாலா: இறந்து போனவருக்காகக் காத்திருக்கும் நாய்!

பிரேசிலில் உள்ள ரூத் கார்டோசோ மருத்துவமனையை சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது நேகோ என்ற அழகிய கறுப்பு நாய். 8 மாதங்களுக்கு முன்பு ஏழை ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவருடன் நேகோவும் வந்தது. தன்னை வளர்த்தவர் திரும்பி வருவார் என்று மருத்துவமனை வாயிலில் காத்துக்கொண்டிருந்தது.

ஆனால் அவர் இறந்துவிட்ட விஷயம் நேகோவுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஆம்புலன்ஸ் வரும்போதும் ஆர்வத்துடன் ஓடும். அவரா என்று பார்க்கும். பிறகு ஏமாற்றத்துடன் திரும்பிவிடும். மருத்துவமனையில் கிடைக்கும் உணவுகளை உண்டு, அங்கேயே 8 மாதங்களாக தங்கியிருக்கிறது. நேகோவின் அன்பைக் கண்டு மருத்துவமனைக்கு வரும் செல்வந்தர்கள் சிலர் தத்து எடுத்துக்கொள்வதாகக் கூறி, அழைத்துச் சென்றனர்.

ஆனால் எவ்வளவு தொலைவுக்கு அழைத்துச் சென்றாலும் மறுநாளே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிடுகிறது நேகோ. பல முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம், நேகோவை பராமரிக்க முடிவு செய்தது. ஆனாலும் தன்னை வளர்த்தவரை தேடுவதை மட்டும் அது நிறுத்திக்கொள்ளவே இல்லை. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே பாய்ந்து சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது. நேகோவைப் பற்றி நிறைய பேர் இணையத்தில் எழுதி வருகிறார்கள். விதவிதமாகப் படங்கள் எடுத்து வெளியிடுகிறார்கள். உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களின் மனத்தில் இடம் பிடித்துவிட்டது நேகோ.

இறந்து போனவருக்காகக் காத்திருக்கும் அன்பான ஜீவன்!

வட கொரியாவுக்கு அவ்வளவு எளிதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்றுவிட முடியாது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் வட கொரியாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். அலெஜண்ட்ரோ காவோ டி பினோஸ் என்பவர் ஸ்பெயினின் டராகோனா நகரில் ‘பியோங்யாங் கஃபே’ திறந்துள்ளார். “நான் கம்யூனிசத்தை நம்புகிறவன். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா மீது நம்பிக்கை வந்தது.

2002-ம் ஆண்டு இரண்டாம் கிம் ஜோங்கை சந்தித்தேன். சர்வதேச கலாச்சார தொடர்பு களுக்கான சிறப்புத் தூதராக என்னை நியமித்தார். நான் திறம்பட பணியாற்றினேன். ‘கொரியன் ஃப்ரெண்ட்ஷிப் அசோசியேஷன்’ ஒன்றைத் தொடங்கினேன். இன்று 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஸ்பெயின் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் வட கொரியாவுக்கு எதிராகவே செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். வட கொரியாவைப் பற்றிய புரிதல் வரவேண்டும் என்பதற்காகவே இந்த கஃபேயை தொடங்கி இருக்கிறேன்.

சுவரில் வட கொரிய கொடி, பொதுவுடைமை கருத்துகளைப் பிரதிபலிக் கும் போஸ்டர்களை வைத்திருக்கிறேன். 1948-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் கிம் வம்சத்தினர் பற்றிய புத்தகங்கங்களும் உண்டு. வட கொரியாவின் பிரத்யேக உணவுகளையும் பானங் களையும் மக்கள் விரும்புகிறார்கள். விரைவில் வட கொரியா குறித்த மூடநம்பிக்கைகள் விலகும்” என்கிறார் அலெஜண்ட்ரோ.

மர்மமோ, மூடநம்பிக்கையோ விரைவில் விலகட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x