Published : 25 Dec 2015 10:51 AM
Last Updated : 25 Dec 2015 10:51 AM

உலக மசாலா: அவமானச் சின்னமான சுவர்

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பது பற்றி காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது. பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் ஒரு சுவர் அவமானத்தின் அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறது. 10 கி.மீ. தூரத்துக்குக் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் சுவர் மீது முள் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பணக்காரர்கள் சுவருக்கு அந்தப் பக்கமும் ஏழைகள் சுவருக்கு இந்தப் பக்கமும் வசிக்கிறார்கள்.

பணக்காரர்கள் தங்களையும் தங்கள் பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தச் சுவரை எழுப்பியிருக்கின்றனர். பெரு நாட்டில் அதிகப் பணக்காரர்களும் மிக மோசமான நிலையில் உள்ள ஏழைகளும் இந்தப் பகுதியில்தான் வசிக்கின்றனர். மரத்தால் ஆன ஒழுகக்கூடிய சிறிய வீட்டில் மின்சாரமோ, அடிப்படை வசதிகளோ இல்லை. இந்தச் சுவரைத் தாண்டினால் அத்தனை வசதிகளுடன் கூடிய பணக்காரர்களின் பங்களாக்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெரு நாட்டு மக்கள் இந்தச் சுவரை அவமானச் சின்னமாகவே கருதுகிறார்கள். எதிர்ப்புக் குரல்களை எழுப்புகிறார்கள். ’’இந்தச் சுவர் மட்டும் இல்லாவிட்டால் உணவுக்கே கஷ்டப்படுகிறவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் செய்யும் குற்றங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றவும் எங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும் சுவர் அவசியம்’’ என்கிறார் ஒரு பணக்காரர்.

சமீபத்தில் தான் இந்தச் சுவர் பற்றிய செய்தி வெளியுலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. சில சமூக ஆர்வலர்கள் இந்தச் சுவர் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதற்காக, ஓவியங்களைத் தீட்டி வருகிறார்கள். லீமாவின் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அரசாங்கப் புள்ளிவிவரம் சொல்வதால், இந்தச் சுவரை இடிப்பது என்பது எளிதில் நடக்கக்கூடிய விஷயம் இல்லை என்கிறார்கள்.

ஜாதி, ஏழை - பணக்காரன் என்று உலகம் முழுவதும் அவமானச் சின்னமாக உத்தமபுரம் சுவர்கள்…



ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கிறார் கிம் உட். இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்காக அவர் வீடு முழுவதையும் பார்பியின் கனவு இல்லம் போல பிங்க் வண்ணமாக மாற்றியிருக்கிறார். வீட்டுச் சுவர், மேற்கூரை, தரை விரிப்புகள், கதவு, நாற்காலிகள், மேஜைகள், அலமாரிகள், பாத்திரங்கள், மின்சாதனங்கள், திரைச்சீலைகள், விளக்குகள், படுக்கைகள், ஆடைகள் என்று அனைத்தையும் பிங்க் வண்ணமாக மாற்றியிருக்கிறார். ‘’பிங்க் வண்ணம் மீது அளவு கடந்த ஆசை.

15 ஆண்டுகளாக ஒவ்வொரு பொருளையும் பிங்க் வண்ணத்தில் சேகரித்தேன். இன்று இந்த பங்களா முழுவதும் பிங்க் வண்ணமாக மாறிவிட்டது. வீட்டுக்குள் மட்டுமல்ல, வெளியிலும் இந்த வண்ணம் தொடர்கிறது. பிங்க் பூக்கள் பூக்கும் செடிகளைத் தோட்டத்தில் வைத்திருக்கிறேன். இரவில் பிங்க் வண்ண விளக்குகள் வீட்டை அலங்கரிக்கும். அக்டோபரில் அலங்காரத்தை ஆரம்பித்தேன். பிப்ரவரியில் காதலர் தினம் வரை வீட்டை பொதுமக்கள் பார்க்க அனுமதிப்பேன்’’ என்கிறார் கிம் உட்.

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா கிம்?

டாவோபாவோ என்பது சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனம். ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் ஆன்லைன் வர்த்தகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஆண்களைக் கவரவும் ஓர் உத்தியைக் கையாண்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் விற்பனையாகும் ஆப்பிள்கள் அனைத்தும் அழகான விமானப் பணிப் பெண்கள் முத்தமிட்ட ஆப்பிள்கள் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. ஓர் ஆப்பிள் 100 நூறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை 500 விமானப் பணிப்பெண்கள் ஆப்பிளை வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆப்பிள்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒருபகுதி விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்னொரு பகுதி முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகிறது. சீனாவின் பெண்ணிய அமைப்புகள் இந்த ஆப்பிள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நினைத்தது போல ஆப்பிள் விற்பனை அவ்வளவு பிரமாதமாக இல்லை என்றும் சொல்கிறார்கள்.

நல்லது செய்வதற்காக என்றாலும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கலாமா?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x