Published : 15 Oct 2015 10:15 AM
Last Updated : 15 Oct 2015 10:15 AM

உலக மசாலா: அட்டகாசமான க்ரியேட்டிவிட்டி!

அமெரிக்காவில் வசிக்கிறார் புகைப்படக்காரர் ஆலன் லாரன்ஸ். அவருக்கு 6 குழந்தைகள். அதில் 2 வயது கடைசி மகன் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

‘‘என் குழந்தைக்குத் தன் குறைபாடு தெரியாமல் இருக்கவும் நாங்கள் மனம் தளர்ந்துவிடாமல் அவனை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளவும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறேன். அதில் ஒன்று என் குழந்தையை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுப்பது. குறைபாடுள்ள குழந்தையை எல்லோரும் நிமிர்ந்து பார்க்கும்படிச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் க்ராண்ட் கேன்யன், கோல்டன் கேட் ப்ரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற இடங்களில் பறந்து செல்வது போல போட்டோஷாப் உதவியுடன் புகைப்படங்களை உருவாக்கியிருக்கிறேன்.

படங்களைப் பார்த்த காலண்டர் நிறுவனம் ஒன்று, அத்தனைப் புகைப்படங்களையும் 2016ம் ஆண்டு காலண்டரில் வெளியிட விரும்பியது. இந்த காலண்டர் விற்பனை மூலம் வரும் வருமானம் அனைத்தும் டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக இயங்கி வரும் 2 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்க இருக்கிறோம்’’ என்கிறார் ஆலன்.

அடடா! அட்டகாசமான க்ரியேட்டிவிட்டி!

ஃப்ளோரிடாவைச்சேர்ந்தவர் 28 வயது கேத்ரின். தன் தோழியுடன் தோட்டத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். காய்ந்த இலையின் சிறு பகுதி கேத்ரின் கண்ணுக்குள் விழுந்துவிட்டது. தன் பையில் இருக்கும் கண் மருந்தை எடுத்து, கண்ணில் விடுமாறு தோழியிடம் கேட்டுக்கொண்டார் கேத்ரின். தோழியும் மருந்தை விட்டார். ஆனால் முதலில் இருந்ததை விட நிலைமை மோசமாகிவிட்டது. கண்கள் புண்ணாகிவிட்டன. இமைகளைத் திறக்கவும் முடியவில்லை. பிறகுதான் கண் மருந்துக்குப் பதிலாக, தவறுதலாக பசையைக் கண்ணில் விட்டிருக்கிறார் என்று தெரிந்தது.

‘‘உடனே மருத்துவரிடம் சென்றேன். அறுவை சிகிச்சை செய்தனர். நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் எனக்கு நிரந்தரமாகப் பார்வை பறிபோய்விட்ட செய்தி இடியாகக் தாக்கியது. சிறு கவனப் பிசகு என் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது’’ என்கிறார் கேத்ரின்.

‘‘கண்களில் ஏதாவது விழுந்துவிட்டால் பதற்றப்படக்கூடாது. சுத்தமான தண்ணீரை விட்டு, கண்களை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் மருந்துகளை மருத்துவர் அனுமதியின்றி கண்களில் விடக்கூடாது. கேத்ரினுக்கு நிகழ்ந்தது ஒரு விபத்து. பசையை கண்ணில் விட்டவுடன் சுத்தம் செய்திருந்தால் பார்வை பறிபோய் இருக்காது’’ என்கிறார் கண் மருத்துவர் பங்கஜ் குப்தா.

உதவி உபத்திரவமாகிவிட்டதே…

இந்தோனேஷியாவின் டானா டோரஜா பகுதி மலையும் காடுமாக இருக்கிறது. இங்கு வசிக்கும் கிராம மக்கள், இறந்த குழந்தைகளை பெரிய மரங்களில் அடக்கம் செய்கிறார்கள். ஓங்கி வளர்ந்திருக்கும் பருத்த மரங்களில் துளைகளை இட்டு, உடலை வைத்து, பனை மரக்குச்சிகளால் அடைத்து விடுகிறார்கள். இப்படி ஒரு மரத்தில் 8 உடல்கள் வரை அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. மரம் உயிருடன் பசுமையாக வளர்ந்து நிற்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இறந்தவர்களுக்காகத் திருவிழாவை நடத்துகிறார்கள். உடல் இல்லாவிட்டாலும் இறந்தவர்கள் தங்களுடனே வசிப்பதாக நம்புகிறார்கள். மரம் இறந்த உடல்களை கிரகித்துக்கொள்ளும் என்று நம்புகிறார்கள்.

விநோத பழக்கங்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x