Last Updated : 03 Sep, 2015 03:44 PM

 

Published : 03 Sep 2015 03:44 PM
Last Updated : 03 Sep 2015 03:44 PM

உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.

மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 192,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருவதால் மானுட நாகரீகம் தொடங்கும்போது இருந்த மரங்கள் எண்ணிககை தற்போது பாதியாக குறைந்துள்ளது. இத்தகவல்கள் நேச்சர் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

தற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன.

இன்றைய தேதி வரை உலக வனப்பகுதிகளை அளவிட விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்களையே நம்பியிருக்கின்றனர். இதனால் மரங்கள் எண்ணிக்கையை சரியாக அளவிட முடியவில்லை. எனவே மரங்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் அசுர முயற்சியாக அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் டி.டபிள்யூ. குரோதர் என்பவர் சுமார் 4 லட்சத்து 30,000 பூமி சார் அளவு முறைகளை பயன்படுத்தி அண்டார்டிகா நீங்கலாக அனைத்து கண்டங்களின் மரங்களைக் கணக்கிடும் உலக வரைபடத்தை உருவாக்கினார்.

ஓரளவுக்கு மிதவெப்பமும் நீராதார இருப்பும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றாலும், பல இடங்களில் மிதவெப்ப, நீராதார இருப்பின் அளவுகளுக்கு இடையே கடும் இடைவெளி மிகுந்துள்ளதால் மரங்களின் வளர்ச்சி விகிதமும் கடுமையாகக் குறைந்துள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் பல விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணமாகியுள்ளன.

“மரங்களின் அடர்த்தி மற்றும் மனிதர்களின் நிலப்பயன்பாடு ஆகியவற்றுக்கான உறவுகள் எதிர்மறையாக உள்ளது. இடத்துக்காக காடுகளை மனிதர்கள் எந்த அளவுக்கு அழித்து வருகின்றனர் என்பதை இது வெளிப்படுத்துகிறது. வெப்பமண்டல பகுதிகளில் காடுகள் அழிப்பு வேகம் அதிகமாக இருப்பதால், இதன் அளவு மற்றும் சீரான விளைவுகள் உலகின் அனைத்து வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் அமைப்பையே தாக்கி வருகின்றன. காடுகளை நிலமாக்கும் மனித செயல்பாடுகள் உலக அளவில் இயற்கைசூழலை அழித்து வருகின்றன” என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த அரிய ஆய்வின் மூலம் புவி வெப்பமடைதலில் மானுடச் செயல்பாடுகள் குறித்த புதிய புரிதல்களும், உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய புதிய உற்பத்திக் கொள்கைகள் பற்றியும் சிந்திக்க வேண்டிய காலக்கட்டம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x