Published : 18 Jun 2017 10:48 AM
Last Updated : 18 Jun 2017 10:48 AM
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசலில் 67-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களின் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்றனர். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதல்வரை மீண்டும் சந்திக்க போராட்டக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 67-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், கலன் என்பவர் தலைமையில் நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் இருந்து இயற்கை ஆர்வலர்கள் 14 பேர் கலந்துகொண்டனர். பின்னர், அவர்கள் நெடுவாசல் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டம் குறித்து கேட்டறிந்தனர்.
இதுகுறித்து நெடுவாசல் போராட்டக் குழுவினர் கூறியது:
மத்திய அரசு கொண்டுவர உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டமானது, நாகாலாந்து, மிசோரம் போன்ற பிற மாநில மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்தை ரத்து செய்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றக் கோரி, தமிழக முதல்வரை மீண்டும் சந்திக்க உள்ளோம்.
இதுதொடர்பாக தீர்மானம் கொண்டுவருமாறு எதிர்க்கட்சி களையும் வலியுறுத்த உள்ளோம். உறுதியான முடிவு கிடைக்கும் வரை நெடுவாசலில் அறவழிப் போராட்டம் தொடரும்.
இவ்வாறு போராட்டக் குழுவினர் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT