Published : 31 Jan 2015 10:40 AM
Last Updated : 31 Jan 2015 10:40 AM

ராணிப்பேட்டை அருகே பரிதாபம்: தோல் கழிவுநீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலி - இறந்தவர்களில் 9 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்

ராணிப்பேட்டை அருகே தோல் கழிவுநீர் பொது சுத்தி கரிப்பு தொட்டி உடைந்து விஷத்தன் மையுள்ள கழிவுகள், தூங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் மீது பாய்ந்ததால் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் அதிர்ஷ்டவச மாக 2 பேர் உயிர் தப்பினர்.

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டை அடுத்த சிப்காட் பகுதி யில் ‘சிட்கோ தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு’நிலையம் உள்ளது. இங்கு 86 தோல் தொழிற்சாலை களின் யூனிட்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் (குரோமியம், குரோமிக் ஆசிட்) கலவைகள், ராட்சத குழாய்கள் மூலம் பொது சுத்திகரிப்பு மையத்தில் தேக்கி வைக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் சுத்திகரிக் கப்படுகிறது.

இதற்காக, சிப்காட் தோல் தொழிற்சாலை வளாகத்தில் கான்கிரீட் மூலம், தரைமட்டத்தில் இருந்து 12 அடி உயரத்தில், 100 அடி நீளம், 12 அடி அகலத்தில் பெரிய தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் 1.5 லட்சம் கன அடி வரை கழிவுநீர் தேக்கி வைக்க முடியும் எனக் கூறப்படு கிறது.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு புதிய தொட்டி அமைக் கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட கழிவுநீர் புதிய தொட்டியில் கொட்டப்பட்டது.

அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கொட்டப்பட்டதால் அழுத்தம் தாங்க முடியாமல் அதிகாலை1.20 மணிக்கு புதிய தொட்டியின் பக்கவாட்டில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறிய விஷத்தன்மையுள்ள கழிவுநீர், ஆற்று வெள்ளம்போல் கீழே கொட்டியது.

தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள்

இதில், கழிவுநீர் தொட்டிக்கு பின்புறம் உள்ள மற்றொரு தோல் தொழிற்சாலையில், இரவுப் பணி முடிந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கழிவுநீர் பாய்ந்து அவர்களை மூடியது. கழிவுநீரில் சிக்கிய மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அபீர்கான் (50), இவரது மகன்கள் அலியார் (25), அலிஅக்பர் (23), ஷாஜஹான் (27), பியார்கான் (25), சுக்கூர்கான் (25), குதூப் (18), ஆஷியர்கான் (23), அக்ரம் (23) மற்றும் வேலூர் அடுத்த கண்ண மங்கலம் பகுதியைச் சேர்ந்த சம்பத் (40) ஆகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே நிறுவனத்தில் பணியாற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அமீர்ரூப் (23) என்பவர், சம்பவம் நடக்கும் போது கழிவுநீர் தொட்டிக்கு அருகேயுள்ள மாடிப் படியில் நின்று உறவினருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் ராணிப்பேட்டை அடுத்த அம்மூரைச் சேர்ந்த ரவி (55) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

மீட்புப் பணி

உயிர் தப்பிய அமீர்ரூப், உடனடி யாக சம்பந்தப்பட்ட தோல் தொழிற் சாலை மேலாளர் மற்றும் நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் கொடுத் தார். தகவல் கிடைத்ததும் வேலூர், ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்தபோது, இருள் சூழ்ந்து இருந்ததாலும் கழிவுநீரில் சிக்கிய தொழிலாளர்கள் அதில் இழுத்துச்செல்லப்பட்டதாலும் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் நீடித்தது. அதிகாலை 6 மணிக்கு மேல் ஒவ்வொரு சடலமாக மீட்கப் பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x