Published : 27 Sep 2016 09:44 AM
Last Updated : 27 Sep 2016 09:44 AM

விமான நிலையம் கோயம்பேடு இடையே நேரடியாக மெட்ரோ ரயில்கள் ஓரிரு மாதங்களில் இயக்கம்: கட்டணத்தை குறைக்க பயணிகள் வலியுறுத்தல்

விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு அடுத்த ஓரிரு மாதங்களில் நேரடியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சின்னமலை விமான நிலையம் இடையே 8.6 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. மேற்கண்ட வழித்தடத்தில் இருக்கும் விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து கணிசமான மக்கள் பயணம் செய்தனர். ஏற்கெனவே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருப்பதுபோல், ஏசி வசதி, லிப்ட், நகரும் படிகள் வசதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. மீனம்பாக்கத்தில் இருந்து விமான நிலையம் இடைப்பட்ட தூரத்தில் சுமார் ஒரு கி.மீ. தூர சுரங்கப்பாதை பயணத்தை புதுமையான அனுபவமாக மக்கள் உணர்கின்றனர்.

தற்போது, விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு செல்ல வேண்டுமென்றால் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு (முதல் தளம்) வந்து, பின்னர் 2-வது தளத்துக்கு சென்று அங்கிருந்து கோயம்பேடுக்கு வேறு ரயிலில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, தடையின்றி விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு ஒரே ரயிலில் நேரடியாக பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

பயண நேரம் குறைவு

இது தொடர்பாக பொதுமக்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘சர்வதேச வசதிகளுடன் மெட்ரோ ரயில் வசதி விமான நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி யாக இருக்கிறது. முன்பெல்லாம் இங்கிருந்து கார் புக் செய்துதான் வீட்டுக்கு செல்வோம். ஆனால், இப்போது நேரடியாக வந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்கி றோம். பொது போக்குவரத்து என்பதால், பாதுகாப்பாக இருப்ப தாக உணர்கிறோம்.

விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு எந்த வாகனங்களில் சென்றாலும் அதிகபட்சமாக 1.30 மணி நேரம் ஆகிவிடும். ஆனால், எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மெட்ரோ ரயிலில் சுமார் 40 நிமிடங்களில் கோயம் பேடு செல்ல முடிகிறது. விமான நிலையத்தில் இருந்து கோயம் பேட்டுக்கு நேரடி சேவை தொடங்கி னால், இன்னும் விரைவாக செல்ல முடியும். மெட்ரோ ரயில் நிலையங்களை மாநகர பஸ்கள் இணைக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்தால் மக்கள் இன்னும் அதிகளவில் பயணம் செய்வார்கள்’’ என்றனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆலந்தூர் - பரங்கிமலை இடையே சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரையில் ரயில் பாதுகாப்பு ஆணையர் நாயக் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். அடுத்த 5 நாட்களில் ஆணையரின் ஒப்புதல் பெற்று ரயில் சேவையை இந்த தடத்தில் தொடங்கவுள்ளோம்.

விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு நேரடியாக செல்ல ஆலந்தூர் அருகே ரூ.4.5 கோடியில் சர்வீஸ் லூப் லைன் இருக்கிறது. இந்த வசதி மூலம் நேரடியாக மெட்ரோ ரயிலை இயக்க முடியும். ஆனால், மெட்ரோ ரயில்களை உடனுக்குடன் இயக்குவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மக்களின் வரவேற்பை பொருத்து, பயணிகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்த பின்னர், அடுத்த ஓரிரு மாதங்களில் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு நேரடி சேவை தொடங்கப்படும்’’ என்றனர்.

பொருட்களுக்கு..

வெளிநாடுகளுக்கு சென்று சொந்த ஊருக்கும் திரும்பு மக்கள், அதிகளவில் பொருட்களை வாங்கி வருவார்கள். இதற்காக பஸ்கள் மற்றும் இதர வாகனங்களில் பொருட்களை கொண்டு செல்லும் போது, எடைக்கு ஏற்றவாறு தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மெட்ரோ ரயிலில் பொருட்களுக்கு என்று தனி கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்தால் மக்கள் இன்னும் அதிகளவில் பயணம் செய்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x