Published : 28 Mar 2015 03:43 PM
Last Updated : 28 Mar 2015 03:43 PM
ஓசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைதான மேலும் 4 ஆசிரியர்களையும் ஏப்ரல் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டார்.
ஓசூரில் தனியார் பள்ளியில் கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின்போது, அறை கண்காணிப்பு பணியிலிருந்த விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் வினாத் தாளை வாட்ஸ்அப் மூலம் சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவி செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை 2 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மேலும், 4 ஆசிரியர்களுக்குத் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் விமல்ராஜ், மைக்கேல்ராஜ், சஞ்சீவ், கவிதா ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், 4 பேரும் ஓசூர் ஜெ.எம்.-2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் 4 பேரையும் ஏப்ரல் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கவிதா கிருஷ்ணகிரி சிறையிலும், மற்ற மூவரும் சேலம் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும் 4 பேரது செல்போன்களும் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் சில முக்கியப் புள்ளிகள் கைதாகக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT