Published : 17 Sep 2014 10:17 AM
Last Updated : 17 Sep 2014 10:17 AM
வங்கக் கடலில் ஒடிஸா மாநிலம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
ஒடிஸா அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாகவும் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலோர ஆந்திரத்தில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. காற்றழுத்தம் தீவிரமடைவதால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் 7 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 6 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், திருத்தணி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT