Published : 23 Apr 2014 10:48 AM
Last Updated : 23 Apr 2014 10:48 AM

மோடியும் அல்ல, லேடியும் அல்ல, தமிழக வளர்ச்சிக்கு என் டாடிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

"தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கு காரணம் மோடியும் இல்லை, தமிழகத்தின் லேடியும் இல்லை, எல்லாவற்றிற்கும் காரணம் என் டாடி கருணாநிதியே" என திமுக பொருளாளர் ஸ்டாலின் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

அண்மையில் தென்சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழ்நாட்டின் இந்த லேடிதான்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின் தனது இறுதிகட்ட பிரச்சாரத்தில் பேசியது தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது புதுக்கோட்டையில் பேசிய ஸ்டாலின்: "இப்போது உங்களை தேடி - நாடி, வருகிறோம் என்று சொன்னால் அம்மையார் ஜெயலலிதா போல ஹெலிகாப்டரில் வரவில்லை. காலையில் திருச்சி மாநகரத்தில் தொடங்கி, பொன்மலை, திருவரங்கம், கந்தர்வ கோட்டை என பல பகுதிகளில் சாலை வழியாக பயணித்து, மக்களை சந்தித்து விட்டு, பிறகு இங்கு புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறோம்.

ஆனால் ஜெயலலிதா அப்படியல்ல, தனி விமானங்கள், ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் பயணிப்பவர். இப்போதெல்லாம் ஜெயலலிதா என்றாலே, ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் என்றால் ஜெயலலிதா என்ற நிலை உருவாகி விட்டது. சிறிது காலத்தில் ஜெயலலிதாவுக்கு - ஹெலிகாப்டர் என்ற பெயர் வைத்து விடுவார்கள். அதேபோல ஹெலிகாப்டர்களுக்கு ஜெயலலிதா என்ற பெயர் கூட வந்து விடும். அந்தளவு ஜெயலலிதா - ஹெலிகாப்டரோடு ஒன்றி போயுள்ளார்.

நேற்று சென்னையில் பேசியுள்ள ஜெயலலிதா, அறிவுஜீவி போல ஒன்றை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை விட அதிக வளர்ச்சி பெற்றது தமிழ்நாடு என்று பேசியதுடன்,"குஜராத்துக்கு ஒரு மோடி என்றால், தமிழகத்துக்கு இந்த லேடி", என்று குறிப்பிட்டுள்ளார். நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழகத்தை பொறுத்தவரையில், தமிழக வளர்ச்சிக்கு காரணம் நமது தலைவர் கலைஞர்தான் என்று சுட்டிக்காட்டுவதுடன்," தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் அந்த லேடியல்ல, அதற்கு காரணம் என் டேடி, என்று தெரிவித்துக் கொள்ள விரும்பும், அதே சமயத்தில் பொய்யான பிரச்சாரங்களை சொல்லி" மக்களை ஏமாற்றும் இவர்கள் எல்லாம் கேடி", என்பதை அனைவரும் உணர்ந்து இருக்கிறார்கள், என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x