Published : 21 Apr 2014 02:10 PM
Last Updated : 21 Apr 2014 02:10 PM

மூவர் வழக்கை அரசியலாக்கவில்லை: அற்புதம்மாளுக்கு கருணாநிதி பதில்

பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கை அரசியலாக்கவில்லை என்று அற்புதம்மாளுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து, நாளையோடு பிரச்சாரம் முடிவடைகின்ற நிலையில், உங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

நன்றாக இருக்கிறது.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றையதினம் சென்னையில் பேசும்போது, தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தன்னலத் திட்டங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

சொத்துக் குவிப்பு வழக்கு எங்கள் மீது நடக்கவில்லை. அவர் மீது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி முதல், ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக் குவிப்பு வழக்கு அந்த அம்மையார் மீது தான் நடக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசும்போது, சேது சமுத்திரத் திட்டம், தங்க நாற்கரை சாலைத் திட்டம் போன்றவற்றில் டி.ஆர். பாலுவுக்கு உள்ள ஈடுபாடு பற்றி மு.க. அழகிரி சாட்டிய குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டிருக்கிறாரே?

யார் குற்றம் சாட்டினார்கள் என்பதல்ல; திட்டவட்டமாக டி.ஆர். பாலு என்ன தவறு செய்தார் என்பதைச் சொல்லட்டும்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலை பற்றி உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் வெளியிட்ட கருத்தை, அரசியல் ஆக்க வேண்டாமென்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சொல்லியிருக்கிறாரே?

அவர்களை விடுவிக்க வேண்டுமென்று தி.மு. கழகம் கோரிக்கை வைத்ததை அனைவரும் அறிவார்கள். ஆனால் நீதிபதிகள் இதுபோன்ற விஷயங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்பதற்காகத்தான், சதாசிவம் பொது விழா ஒன்றில் இது பற்றி பேசுவது சரிதானா என்று கேட்டிருந்தேன். அரசியல் ஆக்குவதற்காக அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x