Published : 25 Apr 2017 02:14 PM
Last Updated : 25 Apr 2017 02:14 PM

முழு அடைப்பு போராட்டம் மகத்தான முறையில் வெற்றி: முத்தரசன்

முழு அடைப்பு போராட்டம் மகத்தான முறையில் வெற்றி பெற்றுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி நீர் கிடைக்காததாலும், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதாலும் நீண்ட காலத்திற்குப் பின்னர் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்தக் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து 16.04.2017 அன்று எதிர்கட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கலந்துரையாடல் கூட்டம் 25.04.2017 அன்று ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

சாகுபடி செய்த பயிர்களை இழந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம், வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாதம் ரூ 5 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். பயிரிழப்பு பாதிப்பால் அதிர்ச்சியுற்றும், தற்கொலை செய்தும் மரணமடைந்துள்ள விவசாயிகளின் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என பாகுபடுத்தாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிலையை சமாளிக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டும். விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்.

நீட் தேர்வுக்கு விலக்களிக்கவேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலையில் தொடங்கிய முழு அடைப்புப போராட்டம் மகத்தான முறையில் வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். பொதுமக்கள் தாமாக முன்வந்து பயணங்களை தவிர்த்து போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். அத்தியாவசியப் பணிகளில் தவிர்க்க முடியாமல் ஈடுபட்டவர்களும் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தை ஆதரித்தனர். அமைதியான முறையில் ஊர்வலமாக சென்ற அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்கள் பல இடங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மற்றும் பாஜகவின் அச்சுறுத்தலையும், மிரட்டலையும் நிராகரித்து முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் பொருள் போக்குவரத்து அமைப்புகள், சாலையோர வியாபாரிகள், கோயம்பேடு சந்தை உள்பட உழவர் சந்தை வியாபாரிகள், வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், மாணவர், இளைஞர் அமைப்புகள், மாதர் அமைப்புகள், அரசுப் பணியாளர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x