Published : 01 Oct 2014 07:58 AM
Last Updated : 01 Oct 2014 07:58 AM
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் நேற்று முழுவதும் ஹோட்டல் அறையில் காத்திருந்த அனைவரும் இரவில் சென்னைக்கு திரும்பினர்.
'ஆட்சி நிர்வாகத்தில் கவனம்'
தமிழக முதல்வரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுப்பு தெரிவித்தது ஓ.பி.எஸ். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனத் தெரிகிறது. இதனை சிறை ஊழியர் வாயிலாக ஜெயலலிதாவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
"ஓ.பன்னீர்செல்வம் தற்போது தமிழகத்தின் முதல்வராகிவிட்டார். அவர் சிறைச்சாலைக்கு வருகை தருவது சரியல்ல. மாறாக அவர் ஆட்சி நிர்வாகத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்" என சிறைத்துறை ஊழியர் வாயிலாக ஜெயலலிதா முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு அனுப்பிய தகவலில் கூறியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை மாலை தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் அன்றிரவு 9 மணிக்கு பெங்களூரை வந்தடைந்தார்.அவருடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விசுவநாதன், விஜயபாஸ்கர், வைத்தியலிங்கம் ஆகியோரும் வந்தனர்.
பெங்களூரில் உள்ள மதான் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவர்கள், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று காலை 9 மணிக்கு சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியிருந்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அதில் ஜாமீன் கிடைத்தால் விடுதலை செய்தியுடன் அவரை சந்திக்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் காத்திருந்தார்.
மேலும் சிறை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடத்தலாம் என திட்டமிட்டு வளர்மதி, கோகுல இந்திரா, தங்கமணி, வேலுமணி, ராமராஜ், செந்தில் பாலாஜி, மோகன் ஆகிய அமைச்சர்களும் பரப்பன அக்ரஹாராவுக்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மீண்டும் ஜெயலலிதாவை சந்திக்க அவரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை என கூறிவிட்டார்.
எனவே ஒரு நாள் முழுவதும் பெங்களூரில் காத்திருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் நேற்று மாலை 5 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினர்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்த பிறகு தங்களை ஜெயலலிதா சந்திப்பார் என பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படு கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT