Published : 23 Jan 2017 06:24 PM
Last Updated : 23 Jan 2017 06:24 PM

மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை உரிமையோடு கொண்டாடுவோம்: பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை உரிமையோடு கொண்டாடுவோம் என்று இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழர்களின் அமைதியான போராட்டத்தின் விளைவாக கிடைத்த வெற்றியையும் அதன் பலனாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்த காட்சியையும் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தேன்.

வெற்றி கிடைத்த பின்பும் அதை அனுபவிக்காமல் நமது நோக்கத்தை திசை திருப்பும் சூழ்நிலை கண்டு மனவேதனை அடைந்தேன். அன்று தமிழர்களுக்கு எதிரான தீய சக்திகள் ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடை செய்தார்கள். இன்று ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் செய்வது எந்த வகையில் நியாயம்?

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து அனைவரின் உரிமையைப் பெற்று நாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். ஆனால், தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி ஒவ்வொரு தமிழனும் வேதனை அடையச் செய்யும் தீய செயலை தடுப்பது எப்படி என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம்.

அறப் போராட்டம் முடிந்துவிட்டது. அநியாயமான போராட்டங்களை தவிர்ப்போம். மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை உரிமையோடு கொண்டாடுவோம்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x