Published : 24 Oct 2014 11:29 AM
Last Updated : 24 Oct 2014 11:29 AM

மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்த ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை அவசியம்

ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

நோய்களால் ஏற்படும் உயிரிழப் புகளில் 13 சதவீத உயிரிழப்புகள் புற்றுநோயால் ஏற்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் இருந்தாலும், மார்பகப் புற்றுநோய் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு அதிக அளவில் வரும் இந்நோயை தொடக்கத்திலேயே கண்டு பிடித்து விட்டால் குணப்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை புற்றுநோயியல் மருத்துவத் துறை தலைவர் கலைச்செல்வி கூறியதாவது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆண்டுதோறும் சராசரியாக 2400 புதிய நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். அதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.

ஆண்டுதோறும் சராசரியாக 360 பேர் (15 சதவீதம்) சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் 270 பேர் (75 சதவீதம்) நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர்.

இந்நோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். அதற்காக நாங்கள் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மேமோகிராம் பரிசோதனையை பரிந்துரைக் கிறோம். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இப்பரிசோத னையை இலவசமாக செய்கிறோம். பெண்கள் தங்கள் மார்பகத்தை சுய பரிசோதனை செய்வதன் மூலமும் இதைக் கண்டுபிடிக்கலாம். அதற்கான பயிற்சியையும் நாங்கள் வழங்கு கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x