Published : 22 Nov 2014 10:37 AM
Last Updated : 22 Nov 2014 10:37 AM

மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டது: இனியாவது வேகம் எடுக்குமா மோனோ ரயில் திட்டம்?

சென்னை மோனோ ரயில் திட்டத் துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதால் திட்டம் வேக மெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெண்டர் பணிகளுக் கான தனியார் ஆலோசக நிறுவனம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பணிகள் தொடங்கப்படும் என்கின்றன அரசு வட்டாரங்கள்.

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக தமிழக அரசு 2011-ல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2 முறை உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு பல்வேறு காரணங்களால் அவை ரத்து செய்யப்பட்டன.

தொடக்கத்தில், 4 வழித்தடங்களில் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மார்ச்சில் 3-வது முறையாக சர்வ தேச டெண்டர் கோரப்பட்டபோது, வடபழனி-பூந்தமல்லி, கத்திபாரா-பூந்தமல்லி ஆகிய தடங்களில் மட்டும் இயக்கப்படும் என்பது தெரியவந்தது. அந்த டெண்டர் இன்னமும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில், மோனோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இனியாவது, திட்டம் வேகமெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசு நிதியுதவி அளிக்காதபோதும், இதுபோன்ற பெரிய திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அது மட்டுமின்றி, வழித்தடங்கள் அமைத்த பிறகு, மீண்டும் ஒருமுறை ஒப்புதல் பெறவேண்டும். பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்ட பிறகே, வர்த்தக ரீதியான இயக்கத்துக்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளிக்கும்.

மும்பை மோனோ ரயில் திட்டத்தை மகாராஷ்டிர அரசு, தனியார் நிதியுதவி இல்லாமல் செயல்படுத்தியபோதும், மத்திய அரசு ஒப்புதல் அளித்தபிறகே வணிகரீதியாக செயல்படத் தொடங்கியது. இது வழக்கமான நிகழ்வு என்றாலும், இந்த ஒப்புதல் கட்டாயமானதாகும். அதன்படி, மோனோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் கோரி 6 மாதங்களுக்கு முன்பு அரசு விண்ணப்பத்திருந்தது.

மத்திய நகர்ப்புற அமைச்சகத்திடம் இருந்து கொள்கை அளவில் ஒப்புதல் கிடைத்துள்ள போதிலும், டெண்டரை இறுதி செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தாதவரை இத்திட்டத்தை தொடங்க முடியாது. டெண்டர் தொடர்பான வழிகாட்டுதல்களுக்காக தேர்வு செய்யப்பட்ட தனியார் ஆலோசக நிறுவனம் இறுதி ஒப்புதல் அளித்தால் மட்டுமே பணிகள் தொடங்கும். அரசின் உயர்மட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x