Published : 18 Dec 2014 10:38 AM
Last Updated : 18 Dec 2014 10:38 AM

மதுரையில் பிறந்த நாள் விளம்பரம் செய்வதில் அதிமுக, அழகிரி ஆதரவாளர்களிடையே போட்டி

மதுரையில் மு.க.அழகிரி பிறந்த நாளுக்காக ஏராளமான சுவர் விளம் பரங்கள் செய்வதைத் தடுக்கும் வகையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக அதிமுகவினர் சுவர் களை முன்பதிவு செய்து விளம்பரம் எழுதத் தொடங்கியுள்ளனர்.

ஜனவரி 30-ம் தேதி மு.க.அழகிரி பிறந்த நாளை ஆண்டுதோறும் அவரது ஆதரவாளர்கள் மதுரையில் கொண்டாடுவது வழக்கம். 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் அழகிரியின் செல்வாக்கு இன்னும் அதிகரித்ததால் அவரது பிறந்த நாள் விழாவன்று பல லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள், பல ஆயிரம் பேருக்கு பிரியாணி என கொண்டாட்டங்கள் அதிகரித்தன.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் மோதல் ஏற்பட்டதால் அழகிரிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் 2012, 2013-ம் ஆண்டுகளில் பிறந்த நாள் விழா உற்சாகம் குறைந்தது. அண்மைக் காலத்தில் அழகிரியின் ஆதரவாளர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர, மற்றவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக மாறினர். இந்த குழப்பங்களுக்கிடையே 2015 ஜனவரி 30-ல் தனது பிறந்த நாளை அழகிரி வழக்கம் போல் கொண்டாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அழகிரியின் ஆதரவாளர்கள் முன்னாள் துணை மேயர் மன்னன், கவுன்சிலர் எம்.எல்.ராஜ் ஆகியோர் கூறும்போது, ‘வழக்கம் போல் அண்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம். இதற்காக ராஜா முத்தையா மன்றத்தை முன்பதிவு செய்துள்ளோம். நலத்திட்ட உதவி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் எப்போதும் போல செய்யப்படும். 200 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் தொடரும்’ என்றனர்.

அழகிரி பெயரில் மதுரை நகர் மற்றும் புறநகரில் பல சுவர்களில் பிறந்த நாள் விளம்பரங்கள் எழுதப்பட்டுவிட்டன. பல சுவர்களில் முன்பதிவும் செய்யப்பட்டுள்ளன. இதையறிந்த அதிமுகவினர் பிப். 24-ல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மதுரையில் சுவர் விளம்பரங்களை செய்யத் தொடங்கியுள்ளனர். அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘2015 பிறந்ததும் அம்மா பிறந்த நாள் விளம்பரங்கள் செய்யத் திட்டமிட்டோம். ஆனால் அழகிரி ஆதரவாளர்கள் பல இடங்களில் எழுதத் தொடங்கிவிட்டனர். தாமதித்தால் எங்களுக்கு சுவர் கிடைக்காமல் போய்விடும். இதைத் தடுக்கவும், எங்கள் அம்மாவின் விளம்பரங்கள்தான் திரும்பிய பக்கம் எல்லாம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இப்போதே எழுதத் தொடங்கிவிட்டோம். இனி அழகிரி ஆதரவாளர்களுக்கு விளம்பரம் செய்ய சுவர் கிடைக்காது’ என்றார். அதிமுகவினர் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிறந்த நாள் விளம்பரப் போட்டி மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x